வருங்கால பிரித்தானிய புலம்பெயர்தல் முகாம்கள் இப்படித்தான் இருக்குமாம்... அச்சமூட்டும் ஒரு செய்தி
அது புலம்பெயர்வோர் தங்கியிருக்கும் ஒரு முகாம்...
ஆனால், பார்ப்பதற்கு அது ஒரு பயங்கர சிறை போல் இருக்கிறது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கூர்மையான முள்வேலி, வேறிடத்துக்கு நகர்த்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், சுற்றிலும் ஆயுதம் தாங்கிய பொலிசார், இது உணவு நேரம் என்பதை அறிவிக்க ஒலிப்பெருக்கிகள் என பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது அந்த இடம். அங்கிருக்கும் யாரும் தப்பிச் செல்வதை கனவில் கூட நினைத்துப்பார்க்கமுடியாது.
அது கிரீஸ் தீவுகளில் ஒன்றான சாமோஸ் தீவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புலம்பெயர்வோர் முகாம். முகாமிலிருந்து வெளியே செல்லவேண்டுமானால் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே முடியும்.
இரவில் அத்தனை பேர்களும் இருக்கிறார்களா என எண்ணிக்கையை சரிபார்க்கும் அதிகாரிகள், அங்கிருப்போர் அகதிகள் என்ற போர்வையில் வந்திருக்கும் தீவிரவாதிகளா அல்லது அவர்களால் பாதுகாப்புக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமா என்பதை அறிய, தினமும் அவர்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுப்பார்கள்.
பல்வேறு நாடுகளிலிருந்து தப்பி, மேற்கத்திய நாடு ஒன்றிற்கு அகதிகளாகச் செல்கிறோம். அங்கே ஒரு அழகான ஹொட்டலில் நம்மைத் தங்க வைப்பார்கள் என கனவுகளுடன் வந்த புலம்பெயர்ந்தோர், இப்படி ஒரு சிறையில் தாங்கள் அடைக்கப்படுவோம் என நிச்சயம் எண்ணியிருக்கமாட்டார்கள்.
முக்கியமான விடயத்துக்கு வருவோம்...
பிரித்தானிய உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல், இந்த முகாம்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்தாராம்.
ஏற்கனவே புலம்பெயர்வோர் மீது கடுமையான கட்டுப்பாடுகளைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பிரீத்தி, இதே போன்ற புலம்பெயர்வோர் முகாம்களை பிரித்தானியாவிலும் அமைக்கும் நோக்கில் இந்த முகாம்களை பார்வையிட்டுச் சென்றுள்ளார்.
ஆக, பிரித்தானியாவிலும் வருங்கால புலம்பெயர்வோர் முகாம்கள் இதேபோல் பயங்கரமானவையாக இருக்கக்கூடும்!