மூன்று வாரத்தினிடையே மூன்றாவது முறை: ஆயுததாரிகளால் மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் ஐந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவின் கெப்பி மாகாணத்தில் நேற்று பள்ளி ஒன்றில் நுழைந்த ஆயுததாரிகள் அங்கிருந்த ஐந்து ஆசிரியர்கள் மற்றும் 80 மாணவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தலில் ஈடுபட்ட ஆயுததாரிகளுக்கும், பொலிசாருக்கும் இடையே நடந்த மோதலில் காவலர் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தேடும் பணி தொடர்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடத்தலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, பிப்ரவரி மாதம் நைஜீரியாவின் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 100 மாணவிகளைத் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
பின்னர் அரசுடனான பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தீவிரவாதிகள் மாணவிகளை விடுவித்தனர். நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் மற்றும் பள்ளி மாணவர்களைக் கடத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பல பள்ளிகளில் இருந்தும் சுமார் 800 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் சில எண்ணிக்கையில் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவர்கள் மாயமானதாகவே கருதப்படுகிறது.