எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள்
கடந்த வாரம், அதாவது, ஜூன் மாதம் 12ஆம் திகதி, அஹமதாபாதில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் பயணித்த 241 பயணிகளுடன், விமானம் விழுந்த கட்டிடத்திலிருந்தவர்களையும் சேர்த்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், அந்த விமானத்தில் விமானியை ஹீரோ என புகழ்கிறார்கள் சிலர்.
விமானியை புகழும் 18 குடும்பங்கள்
ஆம், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் விழுந்த இடத்தில் ஒரு மருத்துவக்கல்லூரியின் ஹாஸ்டல் இருந்ததால், அதிலிருந்தவர்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள்.
ஆனால், அந்த ஹாஸ்டலுக்கு சற்று தொலைவிலேயே, 18 குடும்பங்கள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது.
அந்தக் குடியிருப்பில் வாழும் மக்கள், தங்கள் கட்டிடத்தின் மீது விமானம் மோதாமல் தவிர்த்ததற்காக, விமானியை ஹீரோ என புகழ்கிறார்கள்.
விமானம் அந்த ஹாஸ்டலில் மோதாமல் தங்கள் குடியிருப்பில் மோதியிருக்குமானால், உயிரிழப்பு மேலும் நூற்றுக்கணக்கில் அதிகமாகியிருந்திருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
விமானம் விபத்துக்குள்ளாகப்போகிறது என்பதை அறிந்த விமானியான சுமீத் சபர்வால் (Captain Sumeet Sabharwal), கடைசி நேரத்தில் தங்கள் குடியிருப்பின்மீது மோதாமல், வெறுமையாக இருந்த புல்வெளி ஒன்றில் விமானத்தை இறக்க முடிவு செய்திருக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
அப்படி அந்த புல்வெளியில் விமானத்தை இறக்கும்போது விமானம் அந்த ஹாஸ்டல் மீது மோதியிருக்கலாம் என்று கூறும் அவர்கள், தங்கள் குடியிருப்பின்மீது மோதாமல் தவிர்த்த விமானி சுமீத் தங்கள் உயிரைக் காத்த ஹீரோ என புகழ்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |