17 பெண்களின் உடல்களை சொந்த வீட்டுக்குள் புதைத்த கொலைகாரன்: வெளிவரும் பகீர் பின்னணி
மெக்ஸிகோ புலனாய்வாளர்கள் கிரேட்டர் மெக்ஸிகோ சிட்டி பகுதியில் தொடர் கொலையாளி என்று கூறப்படும் ஒருவரின் வீட்டில் அகழ்வாராய்ச்சியின் போது 3,700 க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகளை கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த 3,700 க்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகள் 17 பேர்களின் உடல்களாக இருக்கலாம் எனவும் புலனாய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி மொபைல் போன்கள், தங்க நகைகள், கைப்பைகள், சாவி உள்ளிட்ட பல பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்கள், மாயமான 6 பேர்களின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
வீடு மொத்தமும் இதுவரை அகழ்வாராய்ச்சி செய்யப்படவில்லை எனவும், இன்னும் பல ஆதாரங்கள் சிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, 34 வயதான ஒருவரின் கொலை குறித்து புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கினர், இந்த நிலையில் ஆண்ட்ரேஸ் என்ற நபரின் வீட்டில் மேலும் குற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் அம்பலமாகின.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் 1991ல் இருந்தே பெண் தோழிகளை கொலை செய்து, அவர்கள் உடல்களை துண்டு துண்டாக சிதைத்து, சொந்த வீட்டுக்குள்ளேயே புதைத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
மெக்ஸிகோ முழுவதும் போதை மருந்து தொடர்பான வன்முறைகள் பல ஆண்டுகளாக நாளும் நிகழ்ந்து வருகிறது.
மட்டுமின்றி, நாளுக்கு 100 படுகொலை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருவதாக புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.