ஹமாஸ் படைகளின் சரிபாதி வீரர்கள்... இஸ்ரேல் போர் தொடர்பில் வெளியான புதிய தகவல்
அக்டோபர் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இஸ்ரேல் தொடுத்த போரால், இதுவரை ஹமாஸ் படைகளின் சரிபாதி வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,600
இஸ்ரேல் எல்லையில் கடந்த அக்டோபர் மாதம் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த திடீர் தாக்குதலில் 1,200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 36,600 கடந்துள்ளது.
இந்த நிலையில், மூத்த அமெரிக்க ராணூவ அதிகாரிகள் மூவர் வெளியிட்டுள்ள தகவலில், ஹமாஸ் படைகளின் தற்போதைய எண்ணிக்கை 9,000 முதல் 12,000 வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் போர் தொடுக்கும் முன்னர் ஹமாஸ் படைகளின் எண்ணிக்கை 20,000 முதல் 25,000 என்றே கூறப்பட்டது. இஸ்ரேல் தரப்பில் இதுவரை, கடந்த 8 மாதங்களில் 300 ராணுவ வீரர்களை இழந்துள்ளது.
2024 இறுதி வரை நீடிக்கும்
மேலும், எண்ணிக்கை பெருமளவு சரிவடைந்துள்ளதை அடுத்து இஸ்ரேல் ராணுவத்தின் இலக்குகளுக்கு வெடிகுண்டுகளால் சேதம் ஏற்படுத்தி வருவதாகவும், நேரிடை போரில் இருந்து ஹமாஸ் படைகள் விலகியுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இஸ்ரேல் ராணுவம் ரஃபா நகரத்தை நெருங்கியதன் பின்னரே ஹமாஸ் படைகள் தந்திரமாக செயல்படுவதாக கூறுகின்றனர். மேலும், பாடசாலை ஒன்றின் மீது முன்னெடுத்த தாக்குதலில் 5 சிறார்கள் உட்பட 39 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹமாஸ் படைகளில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவிக்கையில், போர் குறைந்தபட்சம் 2024 இறுதி வரை நீடிக்கும் என்று கடந்த வாரம் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |