பிரதமர் பதவி விலகவேண்டும்... பிரித்தானிய மக்களில் பாதிபேர் விருப்பம்
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என பிரித்தானியர்களில் பாதி பேர் விரும்புவதாக நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய நபரால் பிரதமருக்கு சிக்கல்
பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியைச் சேர்ந்தவர் பீற்றர் மாண்டல்சன். நாடாளுமன்ற உறுப்பினரான இருந்து, பல்வேறு பதவிகளை வகித்த பீற்றரை அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக நியமித்தார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.
இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களில் யாரெல்லாம் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தார்கள் என்பது குறித்த விவரங்களும், அதற்கு ஆதாரமான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

அவ்வகையில், அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரான பீற்றர், ஒரு இளம்பெண்ணின் அருகே உள்ளாடையுடன் நிற்கும் ஒரு புகைப்படம் உட்பட சில புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.
அத்துடன், பீற்றர், பிரித்தானிய அரசின் முக்கியமான பல ஆவணங்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்டதற்கு ஆதாரமான சில மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளதால், பிரித்தானிய அரசிலும் அரசியலிலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.
அதைத்தொடர்ந்து பீற்றர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பீற்றருக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததும், தான் அவரை பணிநீக்கம் செய்ததாக ஸ்டார்மர் தெரிவித்திருந்தார்.

ஆனால், பீற்றருக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பது குறித்து ஏற்கனவே ஸ்டார்மருக்குத் தெரியும் என்றும், அது தெரிந்திருந்தும் அவர் பீற்றரை அமெரிக்காவுக்கான தூதராக நியமித்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதை பிரதமர் இல்லமும் ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனாலும், பீற்றருக்கும் எப்ஸ்டீனுக்குமான உறவு எவ்வளவு ஆழமானது என்பது தனக்குத் தெரியாது என்றும், அவர் பல ஆண்டுகளாகவே பொய்களை சொல்லிவந்துள்ளார் என்றும், சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் ஆவணங்களிலிருந்துதான் உண்மை தெரியவந்துள்ளது என்றும் கூறியுள்ளார் ஸ்டார்மர்.
பீற்றரைக் குறித்து இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் எனக்கு அப்போதே தெரிந்திருந்தால், நான் அவரை அரசின் கிட்டேயே வர அனுமதித்திருக்கமாட்டேன் என்றும், புதிய தகவல் கிடைத்ததும், உடனே நான் பீற்றரை பணிநீக்கம் செய்துவிட்டேன் என்றும் கூறியுள்ளார் பிரதமர் ஸ்டார்மர்.
ஆனால், ஸ்டார்மரின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த விடயம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களோ, பீற்றர் விடயத்தை ஸ்ட்ராமர் மூடி மறைத்துவிட்டார் என்கிறார்கள்.

இந்நிலையில், பிரித்தானிய மக்களும் பீற்றருடனான தொடர்பு காரணமாக ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என விரும்புவது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
முக்கியமான விடயம் என்னவென்றால், எப்ஸ்டீன் மோசமான குற்றச்செயல் ஒன்றிற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கூட, இந்த பீற்றர், நியூயார்க்கிலுள்ள எப்ஸ்டீனின் வீட்டில்தான் இருந்திருக்கிறார்.
ஆக, பிரித்தானிய ராஜகுடும்ப உறுப்பினரான இளவரசர் ஆண்ட்ரூ, மற்றும் பிரித்தானிய அரசில் முக்கிய பொறுப்பு வகிக்கும் பீற்றர் ஆகிய இருவருடனும் எப்ஸ்டீன் மிக நெருக்கமான உறவு வைத்திருந்தார் என்கிறது Financial Times ஊடகம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |