பிரித்தானியாவில் இளம்பெண்ணும் தாயும் இறந்து கிடந்த விவகாரம்: உடற்கூறு ஆய்வு வெளிக்கொணர்ந்த உண்மை
பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரும் அவரது தாயும் இறந்துகிடந்த நிலையில், அந்த வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் வழக்கை திசை திருப்பும் வகையில் அமைந்திருந்தன.
பிரித்தானிய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவந்தவர் Dr சமன் மீர் சச்சார்வி (49).
தினமும் அவர் பாகிஸ்தானில் வாழும் தனது தாயிடம் தொலைபேசியில் பேசும் நிலையில், ஒரு நாள் மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராததால் பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, அவர்கள் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.
வீட்டிற்குள் சச்சார்வியும் அவரது மகள் வியன் மாங்ரியோவும் (14) பாதி எரிந்த நிலையில் சடலங்களாக கிடப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.
அப்போது, அந்த வீட்டிலுள்ள ஒரு சுவரில், ’இது கொரோனா வீடு, என் தாய் கொடியவள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர் பொலிசார்.
ஆக, தாய்க்கும் மகளுக்கும் பிரச்சினை, மகளைக் கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்டது போன்ற ஒரு தோற்றம் அங்கு காணப்பட்டது.
ஆனால், உடற்கூறு ஆய்வில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகின. சச்சார்வி கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்திருந்ததும் அவரது மகள் வியன் தலையணையால் அழுத்தப்பட்டு இறந்திருந்ததும் தெரியவந்தது.
எனவே, இந்த சம்பவத்தில் வேறு யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என முடிவு செய்த பொலிசார் வீட்டை ஆராய்ந்தபோது, அங்கு இரு மதுபான போத்தல்களும் ஐஸ்கிரீம் போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த பொருட்களை Shahbaz Khan (51) என்பவர் வாங்கியது தெரியவந்தது. கட்டிட வேலை செய்யும் Khan, மருத்துவர் சச்சார்வி வீட்டில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
2020ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி காலை 11.50க்கு Khan சச்சார்வி வீட்டுக்கு வந்திருக்கிறார். இரவு 10 மணிக்குத்தான் அவர் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இந்த விடயங்கள் சிசிடீவி கமெராவில் பதிவாகியுள்ளன.
அக்டோபர் 1ஆம் திகதி சச்சார்வியும் அவரது மகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், குறிப்பிட்ட நாளில் Khan தன்னுடன் தான் இருந்தார் என்றும், பிறகு வேலைக்குச் சென்றுவிட்டார் என்றும் மாற்றி மாற்றி சொல்லியிருந்தார் அவரது மனைவியான Rabia Shahbaz (45).
பொலிசாரின் கவனம் Khan மீது திரும்பிய நிலையில், அவரது வீட்டை சோதனையிடும்போது, அங்கு சச்சார்விக்கு சொந்தமாக நகைகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் பணமும் மறைத்துவைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, சச்சார்வியையும் அவரது மகளையும் கொன்றுவிட்டு, பழியை அவர்கள் மேலேயே போட திட்டமிட்ட Khan, வீட்டுக்குள் ’இது கொரோனா வீடு, என் தாய் கொடியவள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று எழுதிவைத்திருக்கிறார் என்பது உறுதியானது.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, சச்சார்வியும் அவரது மகளும் மயக்கமடைந்து எதிர்த்துப் போராட முடியாத நிலையில், அவர்களைக் கொலை செய்துள்ளார் Khan. கொலை செய்துவிட்டு, தாய்க்கும் மகளுக்கும் சண்டை, அதனால் சச்சார்வி அவரது மகள் வியனைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் காட்ட முயன்றிருக்கிறார் அவர்.
கைது செய்யப்பட்ட Khan மற்றும், சம்பவம் நடந்தபோது தன் கணவர் தன்னுடன்தான் இருந்தார் என பொய்சாட்சி சொல்லிய அவரது மனைவி Rabia ஆகியோர் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Khanக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி Rabiaவுக்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Khan, பணத்துக்காக சச்சார்வியையும் அவரது மகள் வியனையும் திட்டமிட்டுக் கொலை செய்ததற்காக அவருக்கு ஆயுள்தண்டனையும், அவரது குற்றத்தை மறைக்க உதவியதற்காக அவரது மனைவிக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.