ஹன்டா வைரஸ் பரவல்... தயார் நிலையில் இருக்க நாடுகளுக்கு WHO தலைமை அறிவுறுத்தல்
ஹன்டா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதற்குத் தயாராகுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் நாடுகளை அறிவுறுத்தியுள்ளார்.
ஆலோசனை, பரிந்துரை
எம்வி ஹோண்டியஸ் கப்பலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பிரெஞ்சுப் பெண்மணிக்கு, நோயின் மிகவும் கடுமையான பாதிப்பு இருந்ததாகவும், அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருப்பதாகவும் பாரிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட உல்லாசக் கப்பலை ஏற்றுக்கொண்டதன் மூலம் ஸ்பெயின் காட்டிய கருணை மற்றும் ஆதரவுக்காக WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயெசஸ் நன்றி தெரிவித்தார்.
மேலும், 42 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் அதிக ஆபத்துள்ள தொடர்புகளைத் தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய, உலக சுகாதார முகமையின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் பின்பற்றுமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைக்கு, ஒரு பெரிய நோய்ப் பரவலுக்கான எந்த அறிகுறியும் இல்லை, ஆனால் நிச்சயமாக நிலைமை மாறக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். வரும் வாரங்களின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவிலிருந்து கேப் வெர்டே நோக்கிச் சென்று கொண்டிருந்த எம்வி ஹோண்டியஸ் கப்பலில் பயணித்த நெதர்லாந்து தம்பதி மற்றும் ஒரு ஜேர்மானியர் என மூன்று பயணிகள் வைரஸ் தொற்றால் மரணமடைந்ததை அடுத்து, அக்கப்பல் அந்த நோய்ப் பரவலின் மையமாக மாறியது.
உலக சுகாதார அமைப்பு இதுவரை, தொற்றால் பாதிப்புக்குள்ளான ஒன்பது பேரை உறுதி செய்துள்ளது. அவர்களில், கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு பிரெஞ்சுப் பெண் மற்றும் ஒரு அமெரிக்க நாட்டவர் ஆகியோரும் அடங்குவர்.
8 வாரங்களுக்குப் பிறகே
இதனிடையே, மிகவும் கடுமையான இதய மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஹன்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நோயாளி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாரிஸில் உள்ள சுகாதார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு தெரிவித்தனர்.

இந்த நிலையில், எம்வி ஹோண்டியஸ் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, மாட்ரிட்டில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 14 ஸ்பானியர்களில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் அதன் அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹன்டா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், ஆறு முதல் 8 வாரங்களுக்குப் பிறகே அறிகுறிகள் தென்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சொகுசுக் கப்பலில் ஏற்பட்ட ஹன்டா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூரத் தீவுகளைச் சேர்ந்த 10 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையாக, அவர்கள் இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட உள்ளதாக இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, ஹோண்டியஸ் கப்பலில் இருந்த 20 பிரித்தானியர்கள், இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு ஜேர்மானியர் மற்றும் ஒரு ஜப்பானியப் பயணி ஆகியோர் விராலில் உள்ள அரோவ் பார்க் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் குடியிருப்புகளுக்கு அனுப்பப்பட உள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |