பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு துன்புறுத்தல்
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பி இருந்த அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு எதிரான துன்புறுத்தல்களுக்கு வெள்ளை மாளிகை கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.
மோடியிடம் கேள்வி எழுப்பிய அமெரிக்கப் பெண் பத்திரிகையாளர்
சமீபத்தில் அமெரிக்காவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மேலும் ஜூன் 22ம் திகதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது அமெரிக்க வெள்ளை மாளிகைக்கான வால் ஸ்ட்ரீட் பெண் செய்தியாளர் சப்ரினா சித்திக்கி, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு பார்க்க படுவதாகவும், அரசை விமர்சனம் செய்பவர்களை ஒடுக்குவதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றனர், அந்த வகையில் உங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மையினர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு, மற்றும் மக்களின் பேச்சுரிமையை நிலைநாட்ட உங்கள் தலைமையிலான அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் அமெரிக்காவின் மரபணுவிலேயே ஜனநாயகம் உள்ளது, எங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயகம் குறித்து எங்களுக்கு கற்பித்துள்ளனர், மேலும் அதில் எழுதப்பட்ட ஜனநாயகத்தை நாங்கள் பின்பற்றவும் செய்கிறோம் எனவே இந்தியாவில் பாகுபாடுகளுக்கு இடமில்லை என்று தெரிவித்தார்.
பெண் பத்திரிகையாளருக்கு எதிராக துன்புறுத்தல்
பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை எழுப்பிய பிறகு, இதற்கு முதல் எதிர்வினையாக இந்தியாவின் பாஜக தொழில்நுட்பக் குழு தலைவர் அமித் மாளவியா, பெண் பத்திரிகையாளரின் கேள்வி பின்னணி கொண்டது, ஆனால் அதனை பிரதமர் மோடி தன்னுடைய பதிலால் நொறுக்கிவிட்டார் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி எதிராக இந்துத்துவா ஆதரவாளர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு அவருக்கு தொல்லை கொடுத்து வந்தனர்.
அதில் பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி பாகிஸ்தானிய பெற்றோருக்கு பிறந்தவர் என்பதால் இஸ்லாமிய கூற்றுகளின் எதிரொலியாக இந்த கேள்வி இருப்பதாக விமர்சனம் செய்தனர்.
வெள்ளை மாளிகை கண்டனம்
இந்நிலையில் அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டு வரும் துன்புறுத்தலுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் செய்தியாளர் சப்ரினா சித்திக்கிக்கு எதிராக சமூக ஊடகங்களில் எழுந்துள்ள துன்புறுத்தல் மிக மோசமான துன்புறுத்தல் என்றும் அமெரிக்க வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தரவு தொடர்புத் துறை தலைவர் ஜான் கிர்பை வெளியிட்ட கருத்தில், செய்தியாளர் சப்ரினா சித்திக்கி எதிரான தாக்குதல் கண்டிக்கத்தக்கது, அத்துடன் இது போன்ற எந்தவொரு சூழலிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |