என்னை ஏன் இந்திய அணிக்கு எடுக்கவில்லை? ஓய்வுக்கு பின் வேதனையுடன் பேசிய ஹர்பஜன் சிங்
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தன்னை ஏன் இந்திய அணியில் எடுக்கவே இல்லை என்ற காரணம் இதுநாள் வரை தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான, ஹர்பஜன் சிங் தன்னுடைய 31 வயதிலே டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமை பெற்றவர்.
கடந்த 1998-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடிய ஹர்பஜன், 103 டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளும், 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளும், 28 டி20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார்.
2016-ஆம் ஆண்டுக்கு பின் ஹர்பஜனுக்கு அணியில் கிடைக்கவில்லை. இதனால் தொடர்ந்து காத்திருந்த அவர், சமீபத்தில் தன்னுடைய ஓய்வை அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், 31 வயதில் 400 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய என்னை ஏன் 5 ஆண்டுகளாக அணியில் எடுக்கவேயில்லை என்பது தெரியவில்லை. 31 வயதில் 400 விகெட்டுகள் வீழ்த்திய என்னால், அடுத்த எட்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் குறைந்தது 100 விக்கெட்டுகளாவது கூடுதலாக வீழ்த்தியிருக்க முடியும்.
ஆனால் அதன்பின்னர் என்னை அணியிலேயே எடுக்கவில்லை. எதற்காக நான் அணிக்கு தேர்வாகவில்லை? இதன் பின்னணியில் இருப்பது யார்? என்பது எனக்கு இன்று வரை தெரியவில்லை.
டோனியிடம் கூட நிறையமுறை இதைப் பற்றி பேச முயற்சித்தேன். வாய்ப்புகள் கிடைக்கவில்லை, இறுதியில் அப்படியேவிட்டு, இப்போது ஓய்வை அறிவித்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.