கொல்லப்படக்கூடும்... ஆனாலும் நாடு திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஒருவர் வெளிப்படை
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் தற்போது தலைமறைவாக இருப்பவருமான ஷேக் ஹசீனா, தனது உயிருக்கு ஆபத்து என்ற அச்சம் இருந்தபோதிலும், நாடு திரும்ப உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள்ளார்.
மக்கள் அழைக்கிறார்கள்
AFP செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அளித்த பதிலில், நான் கொல்லப்படலாம்; கைது செய்யப்படலாம்; சிறைக்கு அனுப்பப்படலாம், இருப்பினும் டிசம்பர் மாதத்திற்குள் நாடு திரும்ப இருப்பதாக 78 வயதான ஹசீனா கூறியுள்ளார்.

எனது விதி என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன்; ஏனெனில் என் மக்கள் என்னை அழைக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது 15 ஆண்டுகால இரும்புக்கரம் கொண்ட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த மாணவர் தலைமையிலான எழுச்சியால் 2024 ஆகஸ்ட் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஹசீனா, தனது மாளிகையை மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்ட நிலையில் ஹெலிகொப்டர் மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
மாணவர்கள் தலைமையிலான எழுச்சியின் போது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயன்ற அவர் முன்னெடுத்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
கடந்த நவம்பர் மாதம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக டாக்கா நீதிமன்றம் ஒன்றால் ஹசீனா குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது; இத்தீர்ப்பை அவர், சட்டத்தின் வடிவில் முன்வைக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றே குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ரகசியமான ஓரிடத்தில் வசித்து வரும் அவர், தான் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லை என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு பதவியேற்ற இடைக்கால நிர்வாகத்தின் கீழ் இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிப்ரவரி மாதம் வங்கதேசப் பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றதிலிருந்து அந்த உறவுகள் சீரடைந்துள்ளன.

அதிகமான பலப்பிரயோகம்
இதனிடையே, ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு வங்கதேசம் முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது; இக்கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், நாடு திரும்பவிருக்கும் தமது முடிவிற்கும் அதற்கும் தொடர்பில்லை என்றே ஹசீனா தெரிவித்துள்ளார்.
எதிராளிகளைக் கொலை செய்தல், எதிர்க்கட்சிகளை ஒடுக்குதல், நீதிமன்றங்களைக் கையாளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான தேர்தல்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹசீனாவின் நிர்வாகத்தின் மீது மனித உரிமை அமைப்புகள் நீண்டகாலமாகவே குற்றம் சாட்டி வருகின்றன.
ஆனால், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் பல அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பரப்புரைகள் என்று கூறி, ஹசீனா தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தினார்.

மட்டுமின்றி, தன்னைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கு வழிவகுத்த மாணவர் போராட்டங்களின்போது, அளவுக்கு அதிகமான பலப்பிரயோகத்தை மேற்கொள்ள அனுமதித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் ஹசீனா நிராகரித்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் கல்வி அமைச்சர் பதவி விலகக் காரணமாக அமைந்த, இளைஞர்கள் முன்னெடுத்த நாடு தழுவிய போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |