அவர்தான் என் பலம்... காதல் கணவருக்கு பிரித்தானியா மகாராணியாரின் அஞ்சலி
பிரித்தானியா மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் இயற்கை எய்தியுள்ள நிலையில், தன் காதல் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மகாராணியார்.
2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட, கணவனும் மனைவியுமாக அருகருகே அமர்ந்திருக்கும் அந்த படத்தின் அருகே, ’இத்தனை ஆண்டுகளும் அவர்தான் என பலமாக இருந்துவந்துள்ளார், நானும், எங்கள் மொத்தக் குடும்பமும், இந்த நாடும் இன்னும் பல நாடுகளும் அவருக்கு மிகவும் கடன்பட்டுள்ளோம்’ என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த வார்த்தைகள், 1997ஆம் ஆண்டு லண்டனில் உள்ள Banqueting House என்ற இடத்தில், மகாராணியார் தங்கள் பொன் விழா ஆண்டு திருமண நாளின்போது தன் கணவரைக் குறித்து ஆற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
தம்பதிகள் 73 ஆண்டுகள் திருமண வாழ்வில் இணைந்திருந்த நிலையில், தனது 99ஆவது வயதில் உயிரிழந்த தன் கணவருக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக மகாராணியார் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
1953ஆம் ஆண்டு, மகாராணியார் பதவியேற்றுக்கொண்டபோது, தான் அவரது வலதுகரமாக இருந்து அவரை பாதுகாப்பேன் என உறுதியேற்றுக்கொண்டார் இளவரசர் பிலிப்.
அதேபோல், ஒரு நல்ல துணைவனாக சுமார் 70 ஆண்டுகள், தன் மரணம் வரை மகாராணியாருக்கென்றே தன் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துவந்தார் இளவரசர் பிலிப்.