அந்த மக்களின் ஊடுருவலால் ஐரோப்பா சீரழியுது: அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் கடும் விமர்சனம்
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் மக்களை அனுமதித்துள்ளதை அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊடுருவியவர்கள்
1944-இல் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த வடமேற்கு ஐரோப்பாவை விடுவிப்பதற்காக நேச நாட்டுப் படைகள் பிரெஞ்சு கடற்கரைப் பகுதிகளில் தரையிறங்கித் தாக்குதல் நடத்திய 82 ஆண்டுகளுக்குப் பிறகு, நார்மண்டியில் ஹெக்செத் உரையாற்றினார்.

இந்த உரையின் போதே, புலம்பெயர் மக்களை ஐரோப்பிய நாடுகளின் கடற்பகுதியில் ஊடுருவியவர்கள் என ஹெக்செத் குறிப்பிட்டுள்ளார். துரதிர்ஷ்டவசமாக, இன்று ஐரோப்பாவின் பல்வேறு கடற்கரைகள் வெவ்வேறு ஆபத்தான சித்தாந்தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ் மற்றும் பல்கேரியாவின் கடற்கரைகள். படகுகளும் மனிதர்களும் வந்து சேர்கிறார்கள். இந்த ஊடுருவல் குறித்து ஐரோப்பியத் தலைநகரங்கள் எப்போது நடவடிக்கை எடுக்கப்போகின்றன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐரோப்பா முழுவதும் குடியேற்றம் ஒரு முக்கிய அரசியல் விவகாரமாக மாறியுள்ளது; இதில், கடுமையான குடியேற்றக் கொள்கைகளை ஆதரிக்கும் கட்சிகள் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பெரும் முன்னேற்றம் கண்டு வருகின்றன.
ஹெக்செத்தின் கருத்துகள், ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள் ஐரோப்பியக் குடியேற்றக் கொள்கை மீது முன்வைக்கும் மற்றொரு விமர்சனமாக அமைந்துள்ளன.
பிரித்தானியாவில் 18 வயது மாணவன் ஹென்றி நோவாக் கொல்லப்பட்ட சம்பவத்தை விமர்சித்துள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி வேன்ஸ், புலம்பெயர் மக்களின் பெருமளவிலான வருகை குறித்துக் குறிப்பிட்டதுடன், அதற்கு ஒரே பதில் என்பது நியாயமான கோபம் மட்டுமே என்றார்.
ஆனால் ஹென்றி படுகொலை தொடர்பில் தற்போது தண்டனைப் பெற்றுள்ள விக்ரம் திக்வா என்ற இளைஞர் பிரித்தானியாவில் பிறந்த சீக்கியராவார்.
நார்மண்டியில் உரையாற்றிய ஹெக்செத், ஐரோப்பிய நாடுகள் கடுமையான போராட்டத்தின் மூலம் பெற்ற சுதந்திரத்தை இலவசமாகக் கிடைத்ததாகக் கருதி, அதனோடு மிகவும் இயல்பாகப் பழகிவிட்டனர் என விமர்சித்துள்ளார்.
2015-ல் உச்சத்தை எட்டியது
மேலும், இங்கு போரிட்டு உயிர்நீத்த வீரர்கள், ஐரோப்பாவிற்கு சுதந்திரத்தை மீட்டெடுத்தவர்கள் என்றார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் ஐரோப்பிய குடியேற்றக் கொள்கையை விமர்சித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐ.நா. மன்றத்தில் பேசிய அவர், கட்டுப்பாடற்ற குடியேற்றத்தால் ஐரோப்பிய நாடுகள் சீரழிவதாக கூறியிருந்தார். ஐரோப்பிய கண்டத்திற்குள் கடல் வழியாக வந்தவர்களின் எண்ணிக்கை 2015-ல் உச்சத்தை எட்டியது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மத்தியதரைக் கடலைக் கடந்ததாக ஐ.நா. தெரிவித்தது. ஏப்ரல் 2025 மற்றும் மார்ச் 2026 வரையிலான காலகட்டத்தில், பிரித்தானியா, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்குக் கடல் வழியாக மொத்தம் 169,341 பேர் வந்தடைந்தனர்.
இதில் பிரித்தானியாவிற்கு மட்டும் மொத்த எண்ணிக்கையில் சுமார் 23 சதவீத மக்கள் சென்றுள்ளனர். 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 3 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 9,142 பேர் பிரான்சிலிருந்து சிறிய படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குப் பயணம் செய்தனர். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட 38 சதவீதம் குறைவாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |