ஈரான் மோதலால் இந்தியாவிலும் வன்முறை வெடிக்க வாய்ப்பு - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
காமெனி கொல்லப்பட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவிலும் வன்முறைக்கு வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காமெனி கொல்லப்பட்டதால் ஆர்ப்பாட்டம்
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமெனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அயதுல்லா அலி காமெனி ஈரானின் உச்சத் தலைவர் மட்டுமல்லாது ஷியா பிரிவு முஸ்லீம்களின் தலைவராகவும் கருதப்படுகிறார்.
அவர் கொல்லப்பட்டதை கண்டித்து, ஈரான் மட்டுமல்லாது பஹ்ரைன், பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
ஈரான் ஆதரவாளர்கள், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பட்டத்தில் தூதரகத்தை தாக்க முயற்சித்த போது, காவல்துறையினருடன் மோதலில் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
இந்தியாவிலும் ஜம்மு காஷ்மீர், உத்திரபிரதேச தலைநகர் லக்னோ, போபால், பஞ்சாப், சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் அலி காமெனி கொல்லப்பட்டதை கண்டித்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி சாத்தியமான வன்முறைக்கு வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம்(MHA) மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
குறிப்பாக மதக் கூட்டங்களில் வன்முறையை தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் சொற்பொழிவுகள் மூலம் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், எனவே ஈரான் ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்பவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்குமாறு மாநில அரசுகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, சுற்றுலா தளங்கள், இந்தியாவில் உள்ள யூதர்களின் வழிபட்டு தலங்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |