ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் பல கோடிகளை இழந்த கோடீஸ்வர பெண்! நடந்தது என்ன? எச்சரிக்கை தகவல்
ஹாங்காங்கை சேர்ந்த பெரும் கோடீஸ்வர பெண்ணிடம் அதிகாரி போல போனில் பேசி பல கோடிகளை மர்ம நபர் மோசடி செய்துள்ளான்.
ஹாங்காங்கை சேர்ந்த ஒரு 90 வயதான பெண் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆவார். இவருக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் தன்னை ஒரு அமலாக்க அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் ஒரு கடுமையான கிரிமினல் வழக்கில் அப்பெண்ணின் அடையாளம் பயன்படுத்தப்பட்டது என்றும், அவர் தனது பணத்தை ஒரு புதிய வங்கிக் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்றும், அதை வைத்தே அதிகாரிகள் விசாரிக்க முடியும் என்றும் கூறினார்.
விசாரணை முடிந்த பின்னர் பணம் திரும்பி உங்கள் வங்கி கணக்கில் வந்துவிடும் எனவும் தெரிவித்தார். இதை நம்பி கோடீஸ்வர பெண் தனது £23 மில்லியன் பணத்தை அவனுக்கு கொடுத்துள்ளார்.
இதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மோசடி குற்றத்தில் தொடர்புடைய 19 வயது மாணவனை கடந்த மாதம் கைது செய்தனர்.
இதையடுத்து £830,000 மதிப்பிலான வங்கி கணக்கை முடக்கினர். ஆனால் மீதி பணம் காணாமல் போயுள்ளது.
ஹாங்காங்கில் இது போன்ற தொலைபேசி அழைப்பின் மூலம் செய்யப்படும் மோசடி குற்றங்கள் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.