ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா
ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டதற்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் எஞ்சியுள்ள எண்ணெய் வழித்தடங்களை ஈரான் முடக்கக்கூடும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
ட்ரம்ப் மீது அழுத்தம்
பாப் அல்-மண்டேப் நீரிணையை முடக்குவதற்காக, ஈரான் தனது ஹவுதி ஆதரவுப் படையை யேமனில் நிலைநிறுத்தக்கூடும் என சவுதி அரேபியா அஞ்சுகிறது.

சூயஸ் கால்வாய் வழியாக ஆசிய மற்றும் ஐரோப்பியச் சந்தைகளுக்கு இடையே, உலக வர்த்தகத்தில் 10 சதவீதத்தை எடுத்துச் செல்லும் ஒரு மிக முக்கியமான வழித்தடமாகும்.
இந்த நிலையில், வெளியான தகவலின் அடிப்படையில், ஹார்முஸ் முற்றுகையைக் கைவிட்டு, ஈரானுடனான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்புமாறு சவுதி அரேபியாவிடமிருந்து ட்ரம்ப் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி, ஈரான் உயர் தலைவரின் ஆலோசகர்களில் ஒருவரான அலி அக்பர் விலாயதி ஏப்ரல் 5 ஆம் திகதி விடுத்த எச்சரிக்கையில், ஹார்முஸ் நீரிணையில் என்ன நடக்கிறதோ அதே நெருக்கடி பாப் அல்-மண்டேப் நீரிணையும் எதிர்கொள்ளும் என்றார்.
மேலும், அமெரிக்கா தனது முட்டாள்தனமான தவறுகளை மீண்டும் செய்யத் துணிந்தால், ஒரேயொரு நடவடிக்கையின் மூலம் உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தகத்தின் ஓட்டத்தைச் சீர்குலைக்க முடியும் என்பதை அந்த நாடு விரைவில் உணர்ந்து கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பாப் அல்-மண்டேப் நீரிணை தொடர்பில் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபும் எச்சரித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது போன்று, பாப் அல்-மண்டேப் நீரிணையும் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்றால், அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

2023ல் பாப் அல்-மண்டேப் நீரிணை ஊடாக நாள் ஒன்றிற்கு 9 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், காஸா மக்களுக்கு ஆதரவாக முடிவெடுத்த ஹவுதிகள் பாப் அல்-மண்டேப் நீரிணையில் நடத்திய தாக்குதல் காரணமாக அது நாள் ஒன்றிற்கு 4 மில்லியன் பீப்பாய் என சரிவடைந்தது.
ட்ரம்பிடம் கெஞ்சும் நிலை
அத்துடன் Maersk உட்பட பல முதன்மையான கப்பல் நிறுவனங்கள் தங்கள் பாதைகளை மாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதனிடையே, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்திருந்தாலும், சவுதி அரேபியா பாலைவனம் வழியாக செங்கடலுக்குக் குழாய் மூலம் கச்சா எண்ணெயை அனுப்பி, போருக்கு முந்தைய நிலைக்கு, அதாவது ஒரு நாளைக்கு சுமார் எழுபது லட்சம் பீப்பாய்கள் என்ற அளவிற்கு எண்ணெய் ஏற்றுமதியை மீட்டெடுத்துள்ளது.
ஆனால் ஈரானால் பாப் அல்-மண்டேப் நீரிணை முடக்கப்பட்டால் சவுதி அரேபியாவிற்கு அது பேரிடியாக மாறும். ட்ரம்பின் கடற்படை முற்றுகை என்பது எரிசக்தி சந்தைகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, அமெரிக்காவில் தேசிய அளவில் எரிவாயு விலையை 4 டொலருக்கும் மேல் உயர்த்தியுள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் விலையை ஒரு பேரல் 100 டொலருக்கும் மேல் கொண்டு சென்றுள்ளது.

ஈரான் போர் காரணமாக எரிசக்தியின் விலை உயர்ந்ததால், கடந்த மாதம் அமெரிக்காவில் மொத்த விலைகள் கடுமையாக உயர்ந்தன. ஈரான் மீது கடுமையானத் தாக்குதலை முன்னெடுக்கவும், மத்திய கிழக்கை மறுவடிவமைப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பு இதுவெனவும் அமெரிக்காவிற்கு கடுமையான அழுத்தமளித்து வந்த சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தற்போது ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள் என ட்ரம்பிடம் கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |