Hormuz நீரிணையில் எச்சரிக்கையை மீறிய எண்ணெய் கப்பல்... ட்ரோன்களால் வேட்டையாடிய ஈரான்
ஈரானின் எச்சரிக்கையை மீறி Hormuz நீரிணையில் புறப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று, ஈரானிய ட்ரோன் தாக்குதலில் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.
ட்ரோன் தாக்குதல்
ஈரானின் எச்சரிக்கையை அடுத்து ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், உலகளாவிய எண்ணெய் விலைகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க தாக்குதல் மிரட்டலை அடுத்து, ஈரான் விடுத்த எச்சரிக்கையால் குறைந்தது 150 எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது ஈரானின் உயர் தலைவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழி தாக்குதலால் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரான் ஹார்மூஸ் நீரிணையை பயன்படுத்த இனி எப்போது அனுமதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரானுக்கு பயந்து கப்பல் நிறுவனங்களும் ஹார்மூஸ் நீரிணையில் பயணிக்க மறுத்துள்ளது. இந்த நிலையில் ஹார்மூஸ் நீரிணையில் அத்துமீறிய எண்ணெய் கப்பல் ஒன்று ஈரானின் ட்ரோன் தாக்குதலில் நெருப்பு கோளமாக மாறியுள்ளது.
ஓமன் கடற்பகுதிக்கு அப்பால் இன்னொரு கப்பலும் ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதற்கிடையில், நேற்று ஆயத்துல்லா அலி காமெனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்ட கடற்படை தளங்கள் மற்றும் துபாயில் உள்ள ஒரு துறைமுகம் மீது தாக்குதல்கள் நடந்தன.
பாரசீக வளைகுடா அரேபிய கடலில் கலக்கும் ஹர்மூஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று ஏற்கனவே அமெரிக்க இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
உலகின் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெயில் சுமார் 20 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 25 சதவீதமும் ஹார்மூஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
வளைகுடா உற்பத்தியாளர்கள்
அமெரிக்காவின் தாக்குதல் மிரட்டலை அடுத்து, கடந்த மாதத்தில் இருந்தே, ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. ஆனால், உத்தியோகப்பூர்வமாக அந்த கடல் பாதை ஈரானால் தடுக்கப்படவில்லை என்றாலும், அடுத்த பல நாட்களுக்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
மட்டுமின்றி, தற்போது எண்ணெய் கப்பல் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கும் இலக்கான நிலையில், ஈரான் அனுமதிக்காமல் இனி போக்குவரத்து முன்னெடுக்க வாய்ப்பில்லை.
இதன் விளைவாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து இதுவரை கண்டிராத அளவில் எண்ணெய் விலைகள் உயரக்கூடும்.

இதனிடையே, ஈராக், சவுதி அரேபியா மற்றும் கத்தார் உள்ளிட்ட முக்கிய வளைகுடா எண்ணெய் உற்பத்தியாளர்களின் கப்பல்கள் தற்போது பயணிக்க முடியாமல் ஸ்தம்பித்துள்ளது.
இன்று காலை எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் இருந்த நான்கு மாலுமிகள் காயமடைந்ததாகவும் ஓமானில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு துபாய், ஓமன் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன.
அமெரிக்க கடற்படையால் தளவாட மையமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களை வைத்திருக்கும் திறன் கொண்ட ஓமானின் டுக்ம் துறைமுகத்தை ஈரான் தாக்கியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |