ஹமாஸ் விடுவித்த இஸ்ரேல் பெண்மணி: வெளியாகியுள்ள முன்னுக்குக்குப்பின் முரணான தகவல்கள்
அக்டோபர், அதாவது, இம்மாதம் 7ஆம் திகதி, திடீரென இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி ஏராளமானோரை கொடூரமாக கொலை செய்ததுடன், நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
நான்கு பேர் விடுவிப்பு
இந்நிலையில், தங்களிடம் பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்தவர்களில் இரண்டு அமெரிக்கப் பெண்கள், இரண்டு இஸ்ரேல் பெண்கள் என நான்கு பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது.
Credit: Reuters
விடுவிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான Yocheved Lifshitz (85) என்னும் பெண்மணி, தன்னை விடுவித்த ஹமாஸ் குழுவினர் ஒருவரின் கையைப் பிடித்துக் குலுக்கி, இஸ்ரேல் முறைப்படி, உங்களுக்கு அமைதி உண்டாகட்டும் என்று கூறி வாழ்த்தினார்.
Credit: Getty
அதன் பிறகு, அவரும் அவருடன் விடுவிக்கப்பட்ட Nurit Cooper (79) என்பவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்துள்ளார்கள்.
முன்னுக்குக்குப்பின் முரணான தகவல்கள்
நீங்கள் விடுவிக்கப்பட்டபோது எதற்காக ஹமாஸ் ஆயுதக்குழு உறுப்பினரின் கையைப் பிடித்து குலுக்கி, அவருக்கு விடைகொடுத்தீர்கள் என ஊடகவியலாளர்கள் Yochevedஇடம் கேட்டபோது, அவர்கள் எங்களை கனிவாக நடத்தினார்கள், எங்கள் தேவைகளை சந்தித்தார்கள் என்று கூறினார். ஆனாலும், அவர் முகத்தில் பயம் தெளிவாகவே தெரிவதை வெளியாகியுள்ள காட்சிகளில் காணலாம்.
Credit: Reuters
பின்னர், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தன் குடும்பத்துடன் இணைந்தபிறகு, வேறு விதமாக பேசியுள்ளார்.
Yochevedக்கு மொழி பெயர்த்த அவரது மகள் பேச்சில் கோபம் தெரிந்ததை தெளிவாக உணர முடிகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவினர், சுமார் 2.5 பில்லியன் ஷேக்கல், அதாவது 61,59,66,825 டொலர்கள் செலவில் இஸ்ரேல் அமைத்திருந்த வேலியை உடைத்துக்கொண்டு வந்தார்கள். அந்த வேலி கொஞ்சம் கூட உதவவில்லை என்று கூறியுள்ளார். (அத்துடன், தாக்குதல் நடக்கலாம் என பலமுறை எச்சரிக்கப்பட்டும் இஸ்ரேல் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது).
தன்னைக் கட்டிப்போட்டு, ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் தூக்கிப்போட்டுக்கொண்டு சென்றதாக கூறும் Yocheved, வழியில் தன்னை சிலர் கட்டையால் அடித்ததாக கூறுகிறார்.
பின்னர், பல மைல் தூரம் தரைக்கடியில் ஹமாஸ் அமைத்துள்ள சுரங்கப்பாதைகளுக்குள் தன்னை நடத்திச் சென்றதாகக் கூறியுள்ள Yocheved, அங்கு தங்களை கடத்தியவர்கள் சாப்பிட்ட சாப்பாட்டையே தங்களுக்கும் கொடுத்ததாகவும், இரண்டு நாட்களுக்கொருமுறை மருத்துவர்கள் வந்து தங்களை கவனித்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், அங்கு தாங்கள் நரகம் போன்ற சூழலை அனுபவித்ததாகவும், அங்கு கண்ட பயங்கர காட்சிகளை தன்னால் மறக்கமுடியாது என்றும் கூறியுள்ளார் Yocheved.
பல கேள்விகள்
ஹமாஸ் அமைப்பு, மனிதாபிமான அடிப்படையில் அந்த பெண்களை விடுவித்ததாக கூறியுள்ளது. அப்படியானால், அந்த இஸ்ரேல் பெண்களின் வயதான கணவர்களும் இன்னமும் ஹமாஸ் பிடியில்தான் உள்ளார்கள். அவர்களை ஏன் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் ஒருவர், இப்படியே ஹமாஸ் இரண்டு இரண்டு பேராக விடுவித்தால், மொத்தமுள்ள 200க்கும் மேற்பட்டவர்களை விடுவிக்க மூன்று ஆண்டுகள் ஆகும் என்கிறார்.
இன்னொரு பக்கம், இஸ்ரேல் காசா மீது தரை வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதால், அதை தாமதப்படுத்துவதற்காகவே ஹமாஸ் இப்படி இரண்டு இரண்டு பேராக விடுவிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |