சவுதித் தலைநகர் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஹவுதிகள்... உதவத் தயாரென துருக்கி
Houthis claim attacks on Saudi capital: சவுதித் தலைநகர் மீதான தாக்குதல்களுக்கு ஹவுதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஏமனின் ஹவுதிகள் தெரிவித்துள்ளனர்.
ஹவுதிகள் குறிப்பிடவில்லை
தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய விமான நிலையத்திற்கு அருகில் தீப்பிழம்புகள் மற்றும் ஒரு பெரிய புகை மூட்டம் காணப்பட்ட நிலையிலேயே ஹவுதிகளின் அறிவிப்பு வெளியானது.

சவுதி அரேபியாவில் ஹவுதிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ரியாத் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து சவுதி அரேபியா இரவு நேரத்தில் எச்சரிக்கைகளை விடுத்தது.
ஹவுதிகள் ஜூலை மாதம் முதல் சவுதி அரேபியா மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வந்தபோதிலும், தற்போதைய பதற்றம் தொடங்கியதிலிருந்து தலைநகர் ரியாத் மீது அவர்கள் நடத்தியதாகப் பதிவான முதல் தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது.
ரியாத்தில் அவர்கள் எதை இலக்கு வைத்தனர் என்பதை ஹவுதிகள் குறிப்பிடவில்லை; ஆனால், சவுதியின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான செங்கடல் நகரமான யான்பூவில் உள்ள அராம்கோ (Aramco) நிறுவனத்தின் ஒரு மையத்தின் மீதும் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஏமன் தலைநகர் சனாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே, சனிக்கிழமை அதிகாலை ரியாத்தை நோக்கி ஏமன் குழு ஏவிய ஏவுகணையை அதன் வான் பாதுகாப்புப் படையினர் அழித்ததாக ஹவுதிகளை எதிர்த்துப் போராடும் சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி கூறியது.
ரியாத் மற்றும் தலைநகருக்குக் கிழக்கே உள்ள அல்-கர்ஜ் நகரில் வான்வழித் தாக்குதல்கள் நிகழக்கூடிய அபாயம் குறித்து சவுதி சிவில் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை இரவு தொலைபேசி வாயிலாக எச்சரிக்கைகளை அனுப்பியது; பின்னர் சனிக்கிழமை காலை ஆபத்து நீங்கியதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.
பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய பரந்த அளவிலான போரின் ஒரு புதிய மோதல் களமாக, ஹவுதிகளுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான சண்டை உருவெடுத்துள்ளது.
ராணுவத் தேவைகள்
இந்த நிலையில், ஹவுதிகளுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாக ராணுவ ரீதியாகத் தலையிட வேண்டும் என்ற சவுதி அரேபியாவின் கோரிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறார்.

ஹவுதிகள் விவகாரத்தில் அமெரிக்கா கைவிரித்துள்ளதை அடுத்து, தொடரும் ஹவுதித் தாக்குதல்கள் காரணமாக சவுதி அரேபியாவுக்கு ராணுவத் தேவைகள் இருக்கலாம் என்று துருக்கிய வெளிவிவகார அமைச்சர் ஹக்கன் ஃபிடான் கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானையும் உள்ளடக்கிய முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உதவ துருக்கி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த வகையான உதவி அல்லது ஆதரவை துருக்கி குறிப்பிடுகிறது என்பது ஃபிடான் குறிப்பிடவில்லை.
சவுதிக்கு தொழில்நுட்ப உதவிகள் தேவைப்படலாம் என்பதை மட்டும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தம், அந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான ஆயுதத் தாக்குதல், அவை அனைத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்று வரையறுக்கிறது.

இதனிடையே, ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாயி தெரிவிக்கையில், சவுதி அரேபியாவுக்கும் ஹவுதிகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகவும்; அத்துடன், சவுதி அரேபியாவுடன் ஒரு உடன்பாட்டை எட்ட ஏமன் மக்களும் விரும்புவதாகத் தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவுடனான முடங்கிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிபந்தனைகளை, அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட, ஈரான் மத்தியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளதாக ரெசாயி கூறியுள்ளார்.