சிவப்பு பட்டியல் நாடுகளில் இருந்து பிரித்தானியா திரும்பினால் விதிமுறைகள் என்ன? முழு விபரம்
பிரித்தானியாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸால் பயண விதிகளில் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளின் விபரம் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், பிரித்தானியாவில் தற்போது தீவிரமாக பரவி வருகிறது.
இதனால், வெளிநாட்டில் இருந்து பிரித்தானியா திரும்பும் எவரும், புதிய PCR பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பயண விதிகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பயணவிதிகளுக்கு பின், பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு பட்டியல் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் பிரித்தானியா அனைத்து நாடுகளையும், சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியது. அதன் பின் தற்போது நிலவும் ஒமைக்ரான் கொரோனா சூழ்நிலை காரணமாக, சமீபத்திய வாரங்களில் மொத்தம் 11 நாடுகள் மீண்டும் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகள் பட்டியல்
இது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்துக்கு திரும்பும் அனைவருக்கும் பொருந்தும்.
- Angola
- Botswana
- Eswatini
- Lesotho
- Malawi
- Mozambique
- Namibia
- Nigeria
- South Africa
- Zambia
- Zimbabwe
சிவப்பு பட்டியல் நாடுகள் பயண விதிகள் என்ன?
பிரித்தானியா மற்றும் ஐரீஸ் பிரஜைகள் மற்றும் பிரித்தானியா வசிப்பிட உரிமை உள்ளவர்கள் மட்டுமே சிவப்பு பட்டியல் கொண்ட நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
சிவப்பு பட்டியல் நாட்டிலிருந்து நீங்கள் பிரித்தானியாவிற்கு திரும்பினால், என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் பயணத்திற்கு முன், அதாவது 48 மணி நேரத்திற்குள் புறப்படுவதற்கு முந்தைய கொரோனா சோதனையை மேற்கொள்ள வேண்டும். இரண்டு கோவிட்-19 PCR சோதனைகளை உள்ளடக்கிய தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் பேக்கேஜை பதிவு செய்ய வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் செலவில் ஒரு அறையில் பெரியவர்களுக்கு 2,285 பவுண்ட் மற்றும் கூடுதலாக உள்ள பெரியவர்கள் அல்லது 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 1,430 பவுண்ட் மற்றும் 5 முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு, 325 பவுண்ட் கட்டணம் ஆக வசூலிக்கப்படும்.
பயணிகள் இருப்பிடப் படிவத்தை நிரப்ப வேண்டும். உங்கள் கொரோனா தடுப்பூசி நிலை என்னவாக இருந்தாலும் இந்த விதிகள் பொருந்தும்.
சிவப்பு பட்டியலில் இல்லாத நாட்டிலிருந்து நீங்கள் திரும்பினால், புதிய பயண விதிகள் என்ன?
முதலில், பிரித்தானியாவுக்கு திரும்பும் எவரும் பயணத்திற்கு முன் 48 மணி நேரத்திற்குள் புறப்படுவதற்கு முந்தைய சோதனையை மேற்கொள்ள வேண்டும், இது PCR அல்லது வேறு கொரோனா சோதனையாக இருக்கலாம்.
பிரித்தானியா திரும்பியதும், உங்கள் தடுப்பூசி நிலையைப் பொறுத்து விதிகள் மாறுபடும். நீங்கள் தடுப்பூசி போட்டிருந்தால், நீங்கள் இரண்டு நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது நாளில் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்களுக்கு எதிர்மறையான முடிவு வந்தால், அது உங்களைத் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கும்.
நீங்கள் தடுப்பூசி போடாமல் இருந்தாலோ அல்லது ஓரளவுக்கு தடுப்பூசி போடப்பட்டிருந்தாலோ, பிரித்தானியாவில் 10 நாட்களுக்கு சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டு மற்றும் எட்டு நாட்களில் PCR சோதனைகளை எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.