ஈரான் உடனான ஒரு நாள் போருக்கு இஸ்ரேலின் செலவு என்ன? ஆயுத கையிருப்பு எத்தனை நாட்கள் இருக்கும்?
ஈரான் உடனானபோருக்கு இஸ்ரேல் ஒரு நாள் எவ்வளவு செலவு செய்கிறது, அதன் இடமறிப்பான்கள் இன்னும் எத்தனை நாட்கள் இருக்கும் என்பது பற்றி காணலாம்.
இஸ்ரேல் ஈரான் போர்
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புடன் காசாவில் போர் புரிந்து வருகிறது.
தற்போது அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, ஈரான் மீது தாக்குதலை தொடங்கியதன் மூலம், மத்தியகிழக்கில் இஸ்ரேல் மற்றொரு போர்முனையை திறந்துள்ளது.
இதன் மூலம் இஸ்ரேல் ராணுவத்திற்காக செய்யும் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், தொடர்ந்து இது போல் போருக்கு செலவிட முடியுமா என்றும் ராணுவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2023 அக்டோபர் முதல் 2024 ஆம் ஆண்டின் இறுதி வரை, காசா போருக்காக 67.5 பில்லியன் டொலருக்கும்(இந்திய மதிப்பில் ரூ.5.83 லட்சம் கோடி) அதிகமாக இஸ்ரேல் செலவிட்டுள்ளது.
போருக்கான செலவு
இதில், நேரடி போர் செலவுகள், போரினால் அரசு இழந்த வருவாய்கள் ஆகியவை அடங்கும். ஆனால் போரால் இழந்த உற்பத்திதிறன் மற்றும் விநியோகச் சங்கிலி ஆகியவை சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், ஈரானுடனான தற்போதையை போரில் முதல் 2 நாட்களில் மட்டும், 1.45 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.12,532 கோடி) செலவிட்டுள்ளது.
இதில், போர் விமானங்கள் மற்றும் வெடிமருந்துகள் உட்பட தாக்குதல் நடவடிக்கைகளுக்காக 593 மில்லியன் டொலர்களும், மற்ற நிதியை தற்காப்பு நடவடிக்கைகளுக்கும் செலவிட்டுள்ளது.
போரின் வேகம் குறைவடையாத நிலையில், ஒவ்வொரு நாளும் 725 மில்லியன்டொலர்(இந்திய மதிப்பில் ரூ.6,265 கோடி) செலவாகுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில், ஜெட் எரிபொருள் மற்றும் ஆயுதங்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 300 மில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.
முன்னதாக காசா போரின் போதே 3 லட்சத்திற்கும் அதிகமான ரிசர்வ் வீரர்களை ஈடுபடுத்தியதன் மூலம் மக்களின் உற்பத்தி திறனை இழந்ததோடு, அவர்களின் உணவு ஊதியம் என 27 மில்லியன் டொலருக்கு அதிகமாக செலவிட்டது.
மேலும், 2025 ஜனவரி முதல் மே வரை சேதமடைந்த பொதுமக்களின் சொத்துக்களுக்கு இழப்பீடாக ரூ.5,977 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது இஸ்ரேலின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தீரும் ஆயுத கையிருப்பு
ஈரான் தொடர்ந்து ஏவுகணைகளை வீசி வரும் நிலையில், இஸ்ரேல் கைவசம் உள்ள ஏவுகணை இடைமறிப்பான்களின்(missile interceptors)எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அமெரிக்காவின் விநியோகம் இல்லாமல், இஸ்ரேல் அதன் தற்போதைய பாதுகாப்பு நிலையை இன்னும் 10 முதல் 12 நாட்களுக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிற நாடுகளின் உதவியோ அல்லது போரில் இருந்து முறையாக வெளியேறும் வியூகமோ இல்லாவிட்டால், இஸ்ரேல் அதன் ராணுவ மற்றும் பொருளாதார வரம்புகளை மீறும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |