நட்சத்திர வீரருக்கு ஓய்வு... டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு பெரிய இழப்பு!
இலங்கை நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனா காயம் காரணமாக நாளை நடைபெறவுள்ள ‘சூப்பர் 12’ போட்டியில் விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.
நேற்றுடன் தகுதிச்சுற்று முடிந்த நிலையில், குரூப் ‘ஏ’-வில் முதல் இடம் பிடித்த இலங்கை அணி ‘சூப்பர் 12’ சுற்றில் ‘குரூப் 1’பிரிவில் இடம்பிடித்துள்ளது.
‘குரூப் 1’-ல் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் வங்க தேசம் மற்றும் இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளது.
நாளை அக்டோபர் 23ம் திகதி ஷார்ஜாவில் நடக்கும் சூப்பர் 12 சுற்றில் இலங்கை-வங்க தேசம் மோதுகின்றன.
இந்நிலையில், தசை சுளுக்கு காரணமாக இலங்கை நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனாவுக்கு 6 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால், நாளை நடைபெறவிருக்கும் வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடமாட்டார் என தெரியவந்துள்ளது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் 3 போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய மகீஷ் தீக்ஷனா 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.