யுத்தங்களுக்கு இடையே சிக்கிய புதுமணத் தம்பதி! மனைவி உக்ரைன் பதுங்கு குழியில்... கணவன் வேறு நாட்டில் பணய கைதி
கேரளாவை சேர்ந்த கணவன் ஏமனில் பணயக்கைதியாகவும், மனைவி உக்ரைனில் உள்ள பதுங்கு குழியிலும் பதுங்கியிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த தம்பதி அகில் ரகு (25) - ஜிதினா (23). அகில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்யும் நிலையில், ஜிதினா பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அகில் Rawabee கப்பலில் பயணித்த நிலையில் செங்கடலில் கிளர்ச்சியாளர்களால் அந்த கப்பல் கடத்தப்பட்டது.
தற்போது வரை அந்த கப்பலில் இருப்பவர்கள் ஏமனில் பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். அதே போல ஜிதினா, உக்ரைன் தலைநகரில் சிக்கியுள்ளார். போர் தாக்குதல் காரணமாக அங்குள்ள பதுங்கு குழியில் அவர் அடைக்கலம் தேடி கொண்டார்.

அகில் சகோதரர் ராகுல் கூறுகையில், ஏமனில் உள்ள சனா துறைமுகத்தில் இருந்து அகில் சில தடவை எங்களை தொடர்பு கொண்டார். தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் அங்கிருந்து தப்ப முடியவில்லை என்றும் தங்களிடம் கூறியதாக தெரிவித்தார்.
இதனிடையில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், அவரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தம்பதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.