திருமணம் முடிந்த சில நாட்களிலே.. கணவனுக்கு தெரியாமல் வேறோருவருடன் திருமணம்! எப்படி சிக்கினார் தெரியுமா?
சீனாவில், கணவர் ஒருவர் சமூக ஊடகத்தில், தன்னுடைய மனைவி, வேறொருவரை திருமணம் செய்யும் வீடியோவைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதிக்குட்பட்ட பையன்னூர் நகரைச் சேர்ந்தவர் யின் செங். 35 வயதான இவருக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர்கள் நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்துள்ளனர்.
ஆனால், சீனாவில் பெண்களை விட, ஆண்கள் அதிகம் என்பதால், பெண் கிடைப்பது அரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. பல்வேறு இடங்களில் தேடியும் பெண் கிடைக்காத நிலையில், யின் செங், திருமண வரன் பார்க்கும், லீ என்பவரின் உதவியை நாடியுள்ளார்.
அப்போது லீ ஏற்கனவே திருமணம் ஆன பெண் ஒருவர் இருப்பதாக கூறியுள்ளார். பெண் கிடைப்பதே பெரிய விஷயமாக இருப்பதால், திருமணம் ஆன பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறி யின் செங் இதற்கு சம்மதித்துள்ளார்.
அதன் பின் பெண்ணை பார்த்துள்ளார். யின் செங்கின் பெற்றோருக்கும் பெண் பிடித்துவிடவே, அந்த பெண்ணின் பெற்றோரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால், மணமகளின் ஊரில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதால் அவரது பெற்றோரை தற்போது சந்திக்க முடியாது. பாலம் கட்டும் நிறுவனம் நிலங்களுக்கு குடும்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு இழப்பீடு வழங்கிகொண்டு இருப்பதாகவும், திருமணம் செய்துகொண்டால் இழப்பீடு பெற முடியாது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது, நானாவுக்கு வரதட்சணையாக 17 லட்சம் ரூபாயும், நகைகள் மற்றும் திருமண பரிசுகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
இவர்களின் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில், திருமணம் செய்து கொண்ட நானா என்ற பெண், பெற்றோரை பார்ப்பதற்காக செல்வதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால் அதன் பின் அவர் திரும்பவேயில்லை. யின் செங்கின் அழைப்புகளையும் நானா எடுக்கவில்லை. இதனால் மிகுந்த வேதனையில் இருந்த போது, யான் செங் சமூக ஊடகத்தில், திருமண வீடியோ ஒன்றைப் பார்த்துள்ளார்.
அதில், மணப்பெண் தனது மனைவிபோல் இருப்பதால் அதிர்ச்சியடைந்த செங் இது குறித்த விசாரணையில் இறங்கினார். ஜிக்சியாவோவுக்கு சென்று விசாரித்தப்போது வீடியோவில் இருப்பது நானாதான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, விசாரணையில் நானாவும் லீயும் இணைந்து திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களை குறிவைத்து மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரை கைது செய்த பொலிசார், இவர்கள் இது போன்ற திருமண மோசடி மூலம் இரண்டரை கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளது தெரியவந்தது.