காட்டுத்தீயை உருவாக்கிய கொண்டாட்டம்: சிக்கிய 13 சுற்றுலாப் பயணிகள்
கிரேக்க தீவு ஒன்றில் காட்டுத்தீ உருவாக காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட 13 சுற்றுலாப்பயணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
மொத்தமாக 3,000 ஏக்கர்
கிரேக்கத்தின் ஹைட்ரா தீவில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீக்கு காரணம் சொகுசு படகில் இருந்து ஏவப்பட்ட பட்டாசுகள் என்பது அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே, தொடர்புடைய 13 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இவர்கள் Piraeus நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த இச்சம்பவத்தில் மொத்தமாக 3,000 ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பயணிகள் அனைவரும் கஜகஸ்தான் நாட்டவர்கள் என்றும், வாரத்திற்கு 299,000 யூரோ தொகைக்கு சொகுசு படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி சுற்றுலா கிளம்பியவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
20 ஆண்டுகள் வரையில் சிறை
கிரேக்கத்தில் ஏற்கனவே வெப்பநிலை மிகவும் உச்சம் தொட்டு வந்த நிலையில், ஹைட்ரா தீவில் சுற்றுலாப் பயணிகளால் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க, குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 பேர்களுக்கும் 48 மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கிரேக்கத்தில் தீ வைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அழிவுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த 13 பேர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிரூபணமானால் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், 200,000 யூரோ தொகை வரையில் அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |