வெற்றியை என் அம்மாவிற்கு சமர்பிக்கிறேன்! மாயாஜால சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணியை திணறடித்த தமிழக வீரர் உருக்கம்
முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவிய தமிழக வீரர் முருகன் அஸ்வின் அந்த வெற்றியை தனது தாயாருக்கு சமர்பித்துள்ளார்.
முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி முதல் கொல்கத்தாவில் நடைபெற்றது.
இதில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதியில் இமாச்சல பிரதேச அணியையும், அரையிறுதியில் ராஜஸ்தான் அணியையும் வென்றது.
பரோடா அணிக்கு எதிராக நடந்த இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது தமிழக அணி.
இந்த போட்டிகளில் தமிழக அணியின் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்த போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் தமிழக அணியில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற பெருமையையும், 2021-ம் ஆண்டு செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த வெற்றியை தனது அம்மாவிற்கு சமர்ப்பிப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். முருகன் அஸ்வினின் அம்மா இரத்த புற்று நேயால் அவதிப்பட்டு உயிரிழந்து இருந்தார். அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவரது அம்மா உந்து சக்தியாக இருந்து ஊக்கமளித்ததாக குறிப்பிட்டு உள்ளார்.
எனது அம்மாவிற்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே தான் நான் விளையாடுவதற்காக ரப்பர் பந்துகள் முதல், டென்னிஸ் பந்துகள் வரை வாங்கி தருவார்.
நான் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்கமளித்ததோடு, பயிற்சி மேற்கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் எனக்கு பல உதவிகளை செய்து தருவார். என்னுடைய விளையாட்டிற்கு என் அம்மா தான் முதல் ‘பேன்‘.
எனது அம்மா உயிரிழந்த உடன், ஒரு மகனாக அவருக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருந்தது. ஆனால் செய்யது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் இருந்ததால் அதைச் செய்ய என்னால் இயலவில்லை. போட்டியில் வென்ற இந்த கோப்பையை எனது அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
