வணக்கம் நண்பர்களே நான் என் மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டேன்... அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர் எழுதிய சில்லிட வைக்கும் கடிதம்
இன்ஸ்டாகிராமில், வணக்கம் நண்பர்களே நான் என் மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு நானும் தற்கொலை செய்துகொண்டேன் என எழுதப்பட்ட ஒரு கடிதத்தைக் கண்ட நண்பர் ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
அந்த ஆறு பக்க கடிதத்தை எழுதியவர் Farhan Towhid (19) என்ற இளைஞர். பங்களாதேஷிலிருந்து குடிபெயர்ந்த Farhanஇன் குடும்பம், அமெரிக்காவின் Dallas பகுதியில் வாழ்ந்துவந்துள்ளது.
கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மருந்துகள் சாப்பிட்டும் முன்னேற்றம் காணாத Farhan, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.
அவரைப்போலவே சில பிரச்சினைகள் கொண்ட Farhanஇன் அண்ணன் Tanvir (21)ம் அவருக்கு உதவ முடிவு செய்துள்ளார்.
ஆனால், தாங்கள் இறந்தபின் தங்களைக் குறித்து தங்கள் குடும்பம் கவலைப்படக்கூடாது என்று முடிவு செய்து, அண்ணனும் தம்பியுமாக ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள்.
அதன்படி, தம்பி Farhan தன் தங்கை Farbin (19), தன் பாட்டி Altafun Nessa (77) ஆகியோரை சுட்டுக்கொன்றுவிட்டு, தான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
அண்ணன் Tanvir, தங்கள் பெற்றோரான Iren மற்றும் Towhidul Islam ஆகியோரை சுட்டுக்கொன்றுவிட்டு, தான் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
திங்கட்கிழமையன்று நண்பர் ஒருவரின் கோரிக்கையின் பேரில் பொலிசார் அந்த வீட்டுக்கு வந்தபோது, அந்த குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரும் உயிரற்ற சடலங்களாக கிடப்பதைத்தான் கண்டார்கள்.
அவர்கள் அனைவரும், கடந்த சனிக்கிழமையே உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
Farhan எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்காவில் எவ்வளவு எளிதாக துப்பாக்கி வாங்கலாம் என்பதை வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
Farhanஇன் அண்ணன் Tanvir துப்பாக்கி வாங்கச் சென்றாராம். அவர் நிரப்பவேண்டிய படிவத்தில் உங்களுக்கு ஏதாவது மன நல பிரச்சினை உள்ளதா என்று கேட்கப்பட்டிருந்ததாம்.
அவர் இல்லை என எழுதினாராம்.
ஆனால், தன் அண்ணனுக்கு மன நல பிரச்சினை உள்ள நிலையில், அவர் சொன்ன பொய்யை நம்பி, விசாரிக்காமலேயே இரண்டு துப்பாக்கிகள் அவருக்கு விற்கப்பட்டதை நையாண்டி செய்து, அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு எந்த இலட்சணத்தில் உள்ளது பாருங்கள் என்று எழுதியுள்ளார் Tanvir.



