30 ஆண்டுகள் என்ற ட்ரம்ப்: சில மாதங்களிலேயே தயாராகப்போகும் அணு ஆயுதம்.. ஈரானின் ட்விஸ்ட்
ஈரானின் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்கிவிடும் என்று ஐ.நாவின் கீழ் செயல்படும் சர்வதேச அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
முற்றிலும் அழிந்துவிட்டதாக
கடந்த 13ஆம் திகதி ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவும் நேரடியாக தாக்குதலை நடத்தியது.
அதன் பின்னர் ஈரானின் அணு ஆய்வு மையங்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும், இனி அணு ஆய்வு விடயங்களை தொடர அந்நாட்டிற்கு 20 முதல் 30 ஆண்டுகளாவது ஆகலாம் என்று அமெரிக்காவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் கூறினர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக IAEA தலைவர் Rafael Mariano Grossi, சில மாதங்களில் ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்ய தயாராகிவிடும் என தெரிவித்துள்ளார்.
ஈரானால் இயக்க முடியும்
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், "ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் சில பகுதிகள் இன்னும் பயன்பாட்டில் இருக்கின்றன.
சில மாதங்களில் , செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யக்கூடிய சில சென்ட்ரிஃப்யூக்களை ஈரானால் இயக்க முடியும்.
இன்னும் சரியாக சொல்வதெனில், ஓரிரு மாதங்களிலேயே இதை ஈரான் செய்யக் கூடும். இந்த யுரேனியம் எங்கே இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
தாக்குதலின்போது சில யுரேனியம் அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருக்கலாம். இதுகுறித்து தெளிவுப்படுத்தப்பட வேண்டும்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |