விரைவில் ஜேர்மன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவுகள் நிரம்பி வழியும்: எச்சரிக்கும் மருத்துவர்கள்
ஜேர்மன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவுகள் விரைவில் நிரம்பி வழியும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் ஜேர்மன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 சதவிகித படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து பேசிய மருத்துவர்கள் குழு ஒன்றின் தலைவரான Gernot Marx, இப்போதைக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு கடுமையான பொதுமுடக்கம் அறிவித்தால் மட்டுமே, கொரோனா தொற்று புதிதாக உருவாவதை கட்டுப்படுத்தவும் முடியும், தடுப்பூசி போட நேரமும் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
துல்லியமாகக் கூறவேண்டுமானால், 4,500 பேர் தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். ஒரு மாதம் முன்பு இந்த எண்ணிக்கை 3,000ஆக இருந்தது.
ஜேர்மன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் தற்போது 24,000 படுக்கைகள் உள்ளன. அதுபோக, ஏழு நாட்களுக்குள் மேலும் 10,000 படுக்கைகளை ஏற்பாடு செய்ய இயலும். அதே நேரத்தில், இந்த படுக்கைகள் எல்லாம் கொரோனா நோயாளிகளுக்காக என்று ஒதுக்கிவிட முடியாது.
காரணம், தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படும் அவசியம் உள்ள மற்ற நோயாளிகளும் உள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொண்டுதான் ஆகவேண்டும்.
ஆக, இப்போதிருக்கும் சூழலில், மருத்துவமனைகள் ஒரு வருடத்திற்கு முன் இருந்தது போன்ற அதே மாதிரியான கடினமான ஒரு நிலைமையை சந்திக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.