மத்திய கிழக்கின் பிராந்திய போராக மாறும்! அமெரிக்காவுக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால், பின்னர் அது பிராந்திய பதற்றமாக வெடிக்கும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு பதற்றம்
அமெரிக்கா - ஈரான் இடையே நிலவி வரும் தீவிரமான மோதல் போக்கு காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
அத்துடன் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பு என்று அறிவித்தது சிக்கலை மேலும் தூண்டியது.

இதற்கு பதிலடியாக ஐரோப்பிய நாடுகளின் ராணுவங்களை ஈரான் “பயங்கரவாத குழுக்கள்” என்று குறிப்பிட்டது.
பிராந்திய போராக மாறும்
இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்கா தனது கடற்படையை ஈரானுக்கு அருகே நிலைநிறுத்தியுள்ளதை அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், அமெரிக்கா போரை தொடங்கினால், பின்னர் அது பிராந்திய போராக இந்த முறை மாறும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன் நாங்கள் போரை தூண்டுபவர்கள் இல்லை என்றும், எந்த நாட்டின் மீதும் நாங்கள் தாக்குதல் நடத்த விரும்பவில்லை என்றும் அயதுல்லா அலி கமெனி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஆனால் அதே நேரத்தில் ஈரானை தாக்கும் எந்தவொரு நாட்டிற்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சி குறித்து பேசிய அயதுல்லா அலி கமெனி, மக்களின் சமீபத்திய கிளர்ச்சி இராணுவ புரட்சி போன்றது, அது ஒடுக்கப்பட்டு விட்டது என தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை தீவிரம்
ஈரானுடனான மோதல் போக்கு தொடர்ந்து வரும் அதே வேளையில், ஈரான் - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவுடனான ரகசிய பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டு இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஈரான் பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி தகவல் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |