இலங்கையில் வீடு ஒன்றில் இருந்து துப்பாக்கி மீட்பு: விசாரணையை தீவிரப்படுத்தும் அதிகாரிகள்
இலங்கையின் அம்பாறையில் ரீ-56 ரக துப்பாக்கி வீடு ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு பாதுகாப்பு தர பிரிவுகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதி வீடு ஒன்றில் குசன் கதிரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-56 ரக துப்பாக்கி 2 மகசீன்கள் ஆகியவை மீட்கப்பட்டிருந்தன.
கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழு ஒன்று நேற்று முன்தினம் (22) மாலை குறித்த துப்பாக்கியை மீட்டு எடுத்துச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கூடுதல் விசாரணை
மீட்கப்பட்ட துப்பாக்கி ஏதாவது குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா அல்லது கடந்த காலங்களில் அப்பகுதியில் இயங்கிய ஆயுதக்குழுக்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதா என மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் 07 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டவிரோதமாக தனது தந்தை இவ்வாறு ஆயுதத்தை மறைத்து வைத்திருந்ததை மகன் அறிந்து அத்துப்பாக்கியை உத்தியோக பூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியை கடிதம் ஊடாக அணுகியுள்ளார்.
இதற்கிடையில், ஜனாதிபதி செயலகத்தின் குறித்த பிரிவின் பணிப்புரைக்கமைய கொழும்பில் உள்ள பொலிஸ் குழுவினர் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள வீட்டை குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஊடாக அறிவித்த நபருடன் வருகை தந்து அவ்வாயுதத்தை எடுத்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக சந்தேககிக்கப்படும் நபர் விமான ரிக்கட் மற்றும் விசா வழங்குதல் தொடர்பான உப முகவராக செயற்பட்டுள்ளதுடன் சுமார் 7க்கும் மேற்பட்ட மொழியறிவு கொண்டவராக தன்னை இனங்காட்டி சமூகத்தில் நடமாடி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |