உக்ரைனை வேட்டையாடும் ரஷ்யாவை ஏன் கண்டிக்கவில்லை? இம்ரான் கான் விளக்கம்
வலியான, வளமான நாடாக இருந்தால் தான் இரு நாடுகளின் பிரச்சனையில் ஒரு சார்பு எடுக்க முடியும் என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. ரஷ்யாவை எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் இந்த போர் தொடர்பில் எந்த நாட்டிற்கு ஆதரவான நிலைபாட்டையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யாவை கண்டித்து பாகிஸ்தான் ஏன் பேசவில்லை என இம்ரான் கான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் கூறுகையில்,
'பாகிஸ்தானின் எதிர்காலம் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோதுமை, எண்ணெய், எரிவாயு ஆகியவற்றுக்காக அந்நாட்டை சார்ந்துள்ளது. ஏனென்றால், நாங்கள் எங்கள் நாட்டின் 220 மில்லியன் மக்களுக்காக ரஷ்யாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்கிறோம். அதனால் மக்களை நீங்கள் கண்டிக்க ஆரம்பிக்கும்போது ஒரு சார்பு எடுக்க வேண்டும்.
(File)
பொதுவாக சர்வதேச பிரச்சனைகளில் ஒரு தார்மீகமான சார்பு நிலைப்பாட்டினை எடுப்பது நல்ல விடயம் தான். ஆனால், உங்கள் நாடு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாருக்கும் ஆதரவான அல்லது எதிரான நிலைப்பாட்டினை எடுக்க முடியாது. அவ்வாறு செய்ய வேண்டும் என்றால் உங்கள் நாடு செழிப்பான மற்றும் வலிமையான நாடாக இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. மற்றோரு புறம் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போதைய பிரதமரை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.