தாலிபான்கள் இதை மட்டும் செய்யவில்லை என்றால் உள்நாட்டு போர் ஏற்படும்! பாகிஸ்தான் பிரதமர் கடும் எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் ஆட்சி அமைவதில் இழுபறி தொடரும் நிலையில் அவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள், கடந்த மாதம் வெளியேறின. இதையடுத்து, தாலிபான் பயங்கரவாதிகள் கையில் ஆப்கன் மீண்டும் சிக்கியது. தலிபான்களை ஆதரிக்க, அனைத்து நாடுகளும் தயக்கம் காட்டி வருகின்றன.
இதையடுத்து ஆப்கனில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தாலிபான்கள் ஈடுபட்டனர். ஆனால், அவர்களுக்கு அது எளிதாக இல்லை. அதிகாரத்தை வரையறுப்பதில், தாலிபான் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள ஏற்பட்டன. பின், ஒரு வழியாக இடைக்கால பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார்.
முல்லா கனி பராதர் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்; 70க்கும் மேற்பட்டோர் அடங்கிய இடைக்கால அமைச்சரவை யும் நியமிக்கப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தான் துணைப் பிரதமர் முல்லா கனி பராதர், பாகிஸ்தான் ஆதரவு ஹக்கானிகளால் ஓரங்கட்டப்படுவதால், தாலிபான்களுக்குள் பிளவு ஏற்பட்டு உள்ளது. சில வாரங்களுக்கு முன், பராதர் ஹக்கானி, தலைவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் உலவின.
தாலிபான்கள் இதை மறுத்தாலும், பராதர் இன்னும் மக்கள் முன் நேரிடையாக தோன்றவில்லை. இதனால் ஆப்கனில் தாலிபான்களால் அமைச்சரவையை அறிவித்தும், அவர்களால் இடைக்கால அரசை அமைக்க முடியாததால், அங்கு இழுபறி நீடிக்கிறது.
இந்நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தலிபான்கள் கொடுக்காவிட்டால், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து பிரிட்டன் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், தாலிபான்கள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும், மற்ற பயங்கரவாத அமைப்புகள், ஆப்கன் மண்ணை, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும்.
தாலிபான்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை தர வேண்டும். இல்லாவிடில், உள்நாட்டுப் போர் மூள்வதைத் தடுக்க முடியாது. அப்படியேதும் நடந்தால், ஆப்கன் பயங்கரவாதிகளுக்கு உகந்த இடமாக மாறிவிடும். அது, ஆப்கனுக்கு மட்டுமின்றி, பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும் ஆபத்து என கூறியுள்ளார்.