ரஷ்யாவுடன் நல்லுறவில் இருந்திருந்தால் இது நடந்திருக்கும்: இம்ரான் கான்
பாகிஸ்தான் மலிவான விலையில் எரிவாயு, கோதுமை பெற ரஷ்யாவுடன் நல்லுறவில் இருந்திருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாடுவாழ் பாகிஸ்தானியர்களுடன் வீடியோ வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெளிநாட்டு சதிக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அதன் சொந்த நலன்களுக்காக வடிவமைக்கப்பட வேண்டும். பாகிஸ்தானியர்களுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையை மட்டுமே நான் விரும்பினேன். வேறு எந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்காகவும் நம் நாட்டைப் பலியிடக் கூடாது.
நாங்கள் ரஷ்யாவிலிருந்து மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை விரும்பினோம். மாஸ்கோ எரிவாயு மற்றும் கோதுமையை 30 சதவீதம் குறைந்த விலையில் வழங்க ஒப்புக்கொண்டது. ரஷ்யாவுடன் நல்லுறவை வைத்திருந்தால், நம் நாட்டிற்கு மலிவான எரிவாயு மற்றும் கோதுமையை ரஷ்யாவிடம் இருந்து உறுதி செய்திருக்க முடியும்' என கூறினார்.
அத்துடன், எனது தலைமையிலான பிடிஐ அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலை இப்போது புதிய சாதனை அளவைத் தொட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளிநாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கடிதம் எழுத வேண்டும். சமூக ஊடக பிரச்சாரங்களை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.