மாணவிகள் இல்லாமல் நாங்களும் பள்ளிக்கு போகமாட்டோம்! ஆப்கானில் தலிபான்களுக்கு எதிரான மாணவர்கள் போர்க்கொடி
ஆப்கானிஸ்தானில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்க தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசில் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் மட்டுமே வரவேண்டும் என்று தெரிவித்த தலிபான்கள், மாணவிகள் வருகை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆக., 15ம் தேதி கைப்பற்றினர். '1996 - 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது, பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும்' என, தலிபான்கள் உறுதியளித்த நிலையில், ஆட்சிக்கு வந்ததும் அதிலிருந்து முழுவதுமாக மாறுபட்டு உள்ளனர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்ல தடை விதித்துள்ள நிலையில், ஒற்றுமையை வெளிப்படத்தும் வகையில் மாணவர்கள் தாங்களாகவே பள்ளிக்கு செல்ல மறுத்து வருகின்றனர்.
மேலும், ‘எங்கள் சகோதரிகள் இல்லாமல் நாங்கள் பள்ளிக்குச் செல்ல போவதில்லை’ என எழுதப்பட்ட அட்டையை கையில் எழுந்திய படி இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.