பிரித்தானியாவில் பாம்பு கடிக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆய்வு முடிவுகள்
பிரித்தானியாவில் பாம்பு கடித்ததாக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த 11 ஆண்டுகளில் 300 பேருக்கு பாம்பு கடிக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் பதின்ம வயதினர் அல்லது சிறு பிள்ளைகள் என தெரிவித்துள்ளார்கள்.
அப்படி பாம்பு கடித்து சிகிச்சைக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்துவிட்டாலும், சிலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறும் அளவுக்கு சென்றதாகவும், ஒருவருடைய விரலின் ஒரு பகுதியை அகற்றவேண்டியிருந்ததாகவும், மற்றொருவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பாம்பு கடித்து உயிரிழந்த அந்த நபர் ராஜ நாகம் ஒன்றினால் கடிபட்டதாகவும், கடிபட்ட அவர், குடிகாரனைப்போல தடுமாறிப் பின் நிலைகுலைந்து விழுந்ததாகவும், அவர் உயிரிழப்பதை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
news.sky
அந்த நபருக்கு பாம்பு கடிக்கான நச்சு முறிவு மருந்து 10 டோஸ் கொடுக்கப்பட்டபின்னரும் கடைசியில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டாராம். விஷத்தை முறிக்க கொடுக்கப்பட்ட அந்த நச்சு மருந்தே அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 2009ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடையில், 321 பேர் பாம்பிடம் கடிபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த எண்ணிக்கை 2004ஆம் ஆண்டுக்கும் 201ஆம் ஆண்டுக்கும் இடையில் பாம்பிடம் கடிபட்டவர்களின் எண்ணிக்கையைவிட மிகவும் அதிகரித்துள்ளது என்பதுதான்.