மாஸ் காட்டிய இந்திய அணி - வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்று அசத்தல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அகமதாபாத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதனிடையே இன்று அதே மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து துடுப்பாட தொடங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களிலும், விராட் கோலி 18ஓட்டங்களிலும், பண்ட் 14 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிகப்பட்சமாக சூர்யகுமார் யாதவ்(64), கே.எல்.ராகுல் (49) ஓட்டங்கள் எடுக்க மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ஓட்டங்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகப்பட்சமாக அல்சாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 238 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் ஷார்மார் புரூக் 44, அஹீல் ஹூசைன் 34, ஹோப் 27, ஸ்மித் 24 ஓட்டங்கள் எடுக்க 46 ஓவர்கள் மட்டுமே தாக்குப்படித்த வெஸ்ட் இண்டீஸ் 193 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் இந்தியா 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 11 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.