உக்ரைன் தானிய ஒப்பந்தம் ரத்து ஒருபக்கம்... அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த முக்கிய ஆசிய நாடு
உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா அதிரடியாக விலகி, பல நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு திடீரென்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
விலை உயர்வுக்கு வழிவகுக்கும்
இந்தியாவின் இந்த திடீர் நடவடிக்கை என்பது உலகளாவிய உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை இந்தியா தடை செய்துள்ளது.
@reuters
திடீரென்று பெய்த கன மழை, வெளிநாட்டு தேவையை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட சர்வதேச ஏற்றுமதி மீதான 20% வரி உரிய பலனை அளிக்காதது மட்டுமின்றி தீவிர காலநிலை மாற்றத்தால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்திய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது, உலகளாவிய ஏற்றுமதியில் 40% க்கும் அதிகமாக இந்தியா முன்னெடுக்கிறது. ஆனால் தற்போது உயர் ரக பாஸ்மதி அரிசிக்கு ஏற்றுமதி தடை விதிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்ளூர் அரிசி விலையை கட்டுப்படுத்தும்
மேலும், சர்வதேச சந்தையில் இந்திய அரிசியின் விற்பனை 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதுடன், உள்ளூரில் விலை உயர்வானது 3 சதவீதம் வரையில் அதிகரித்தது. மட்டுமின்றி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய மக்கள் அரிசிக்காக 11.5 சதவீதம் அதிகமாக செலவிடும் சூழல் உருவானது.
@getty
இதனையடுத்தே, உள்ளூர் அரிசி விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மாநிலங்களில் தேர்தல்கள், தேசிய அளவில் தேர்தலும் நெருங்கி வரும் நிலையில் விலைவாசி உயர்வு என்பது நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த ஏற்றுமதி தடையானது பல ஆசிய நாடுகளின் அரிசி விலை உயர்வுக்கும் காரணமாக அமைந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உலகம் முழுவதும் பண்டங்கள் மற்றும் தானியங்களின் விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |