பெயரை வைத்து சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா! திபெத்தில் புதிய பெயர் சூட்ட முடிவு
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயரை சீனா மாற்றியதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக திபெத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் செயல்பாடு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறிவரும் சீனா பலமுறை அங்குள்ள இடங்களுக்கு புதிய பெயர் சூட்டி மறுபெயரிட்டுள்ளது.
முதன்முதலாக சீனா, கடந்த 2017-ம் ஆண்டில் அருணாச்சல பிரதேசத்தின் 6 இடங்களுக்கும், 2021-ம் ஆண்டில் 5 இடங்களுக்கும், 2023 -ம் ஆண்டில் 11 இடங்களுக்கும் புதிய பெயர்களை அறிவித்தது.
இதையடுத்து கடைசியாக கடந்த மார்ச் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் குடியிருப்பு பகுதிகள், மலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளை உள்ளடக்கிய 30 இடங்களுக்கு புதிய பெயரை சூட்டியது.
இந்தியா பதிலடி
சீனாவின் இந்த நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டுவதால் எதார்த்தநிலை மாறிவிடாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திபெத்தில் 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு புதிய பெயர் சூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் மாற்றம் செய்யப்பவுள்ள இடங்களின் பட்டியல் ராணுவத்தின் மூலம் இறுதி செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய பெயர்களின் முடிவானது சீனப் பெயர்களை எதிர்க்கும் உள்ளூர் மக்களின் கருத்துகளின் அடிப்படையில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மீண்டும் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருக்கும் நிலையில், இந்தப் பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |