விமான கட்டணத்திற்கான உச்சவரம்பு நீக்கம் - இந்தியாவில் உயரும் டிக்கெட் கட்டணம்?
விமான கட்டணத்திற்கான உச்சவரம்பை நீக்கியுள்ளதால், நாளை முதல் இந்தியாவில் உள்நாட்டு பயணத்திற்கான விமான கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உச்ச வரம்பை நீக்கிய இந்தியா
கடந்த ஆண்டு இறுதியில் இண்டிகோவில் ஏற்பட்ட விமான சேவை குளறுபடியால், பிற விமான நிறுவனங்கள் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தின.

இதனையடுத்து, உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்திற்கான உச்சவரம்பை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டது.
இதன்படி, ஒரு வழித்தடத்திற்கு அதிகபட்சமாக ரூ.18,000 வரை மட்டுமே வசூலிக்கவும், 500 கிலோமீட்டர் வரை ரூ.7,500, 1,000 கி.மீ வரை ரூ.12,000 வரை வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.
உயரும் விமான கட்டணம்
இந்த உச்ச வரம்பை நீக்காவிட்டால் விமான நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டு முடங்கும் நிலை வரலாம் என்று இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Airlines) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது.
இதனையடுத்து, இண்டிகோ விமான சேவை மறுபடியும் சீராகியுள்ளதோடு, விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமான பயண கட்டணங்களுக்கான உச்சவரம்பு இன்று நீக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, உள்நாட்டு விமான சேவை கட்டணம் உயர உள்ளதாக பயணிகளிடையே கவலை எழுந்துள்ளது.
அதேவேளையில், விமான நிறுவனங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தக் கூடாது, நியாயமான முறையில் கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
அவசர காலம் அல்லது பண்டிகை, விடுமுறை நாட்களில் அதிகளவில் கட்டணத்தை உயர்த்தினால் அரசு தலையிடும் என எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |