இனி சமூக ஊடக கணக்கிற்கும் KYC கட்டாயம் - மத்திய அரசு பரிசீலனை
சமூக ஊடக பயன்பாட்டிற்கு KYC அடிப்படையிலான பயனர் அங்கீகாரம் மேற்கொள்ள நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
சமூக ஊடக பயன்பாட்டிற்கு KYC
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், இந்தியாவில் சிறார்களுக்கு சமூகஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென சில மாநிலங்கள் அறிவித்தன. மத்திய அரசும் இது குறித்து ஆலோசித்து வந்தது.

இந்த நிலையில், சமூக ஊடக பயன்பாட்டிற்கு KYC அடிப்படையிலான பயனர் அங்கீகாரம் மற்றும் வயது சரிபார்ப்பு மேற்கொள்ள உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகங்களுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
வங்கி மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளில் KYC விதிமுறைகளின்படி, ஒரு சேவையைப் பெறுவதற்கு முன்பு பயனர்கள் ஆதார் அல்லது பான் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதே போல், சமூக ஊடக பயன்பாட்டிற்கும் KYCயை அறிமுகப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
2019 முதல் ஏப்ரல் 2025 வரையிலான காலகட்டத்தில், தேசிய இணையக் குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான 2.48 லட்சத்திற்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பலரும் களங்கம் காரணமாக புகாரளிக்காமல் இருப்பதால் இந்த எண்ணிக்கை குறைவு ஆகும்.

இணையவழித் துன்புறுத்தல், அனுமதியின்றி தனிப்பட்ட படங்களைப் பரப்புதல் போன்ற இணையவழித் துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுப்பதில், போலி அல்லது சரிபார்க்க முடியாத கணக்குகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக இந்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக தற்போது பாதிக்கப்பட்டவர்கள் புகாரளித்தாலும், இவர்களை கண்டறிவது கடினமாக உள்ளது.
KYC உடன் இணைக்கப்பட்ட பயனர் கணக்குகள் மூலம், தடமறிதலை மேம்படுத்தவும், வயதுக்கு ஒவ்வாத உள்ளடக்கத்திற்கான அணுகலைக் கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் தளங்களின் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் முடியும் என நம்பப்படுகிறது.
பரிந்துரைகள்
பெண்கள் மற்றும் சிறார்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலி சுயவிவரங்கள், ஆள்மாறாட்டம் மற்றும் அநாமதேய துன்புறுத்தல் போன்றவற்றை கட்டுப்படுத்த, KYC அடிப்படையிலான சரிபார்ப்பை அறிமுகப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த சரிபார்ப்பை மீண்டும் மீண்டும் மேற்கொள்ள வேண்டும்.
தவறான பயன்பாட்டிற்காக மீண்டும் மீண்டும் புகாரளிக்கப்படும் கணக்குகளுக்கு அதிக ஆபத்துள்ள குறியீடுகளைப் பராமரிக்க வேண்டும்.

டேட்டிங் மற்றும் கேமிங் செயலிகளுக்குக் கடுமையான உரிம விதிமுறைகள் மற்றும் வயது சரிபார்ப்பு நெறிமுறைகள் நிறுவப்பட வேண்டும்.
பெண்கள் மற்றும் சிறார்களைப் பாதுகாக்கத் தவறும் தளங்களுக்குத் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் சமூக ஊடக பயன்பாட்டிற்கு KYC அறிமுகப்படுத்துவதன் மூலம், தனியுரிமை, தரவு பாதுகாப்பு குறித்தான விவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |