பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா
காஷ்மீர் மாகாணத்தின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதன் மூலம் இந்திய அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்தது.
இந்தியா ஒரு பெரிய திட்டத்தை
தற்போது இந்திய அரசாங்கம், சிந்து, சட்லஜ் மற்றும் பியாஸ் நதிகளில் இருந்து தண்ணீர் வருவதை நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானை மொத்தமாக பாதிக்கக்கூடிய ஒரு நீண்டகால நீர் உத்தியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிவரும் தகவலின் அடிப்படையில், சிந்து நதியின் நீரைத் திருப்பிவிட இந்தியா ஒரு பெரிய திட்டத்தைத் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. இந்தத் திட்டமானது சிந்து நதியை ரவி மற்றும் பியாஸ் நதிகளுடன் இணைத்து, பின்னர் சட்லஜ் நதி வழியாக பஞ்சாபில் உள்ள ஹரிகே தடுப்பணைக்கு கொண்டு செல்வதை உள்ளடக்கியது.
இந்த திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக 12 பெரிய சுரங்கப்பாதைகள் கொண்ட 200 கிலோமீற்றர் நீள கால்வாயை அமைப்பது என்றே கூறப்படுகிறது. இந்த திருப்பிவிடப்பட்ட நீர் பின்னர் ராஜஸ்தானில் உள்ள இந்திரா காந்தி கால்வாய், கங்கை கால்வாய் ஆகியவற்றில் பாய்ந்து, இறுதியில் யமுனை நதியை அடையும்.
வெளிவரும் தகவலின் அடிப்படையில், கங்கை கால்வாயின் கொள்ளளவை விரிவுபடுத்தவும், வண்டல் மண்ணை அகற்றவும், கசிவை நிறுத்தவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
சிர்ஹிந்த் ஃபீடர் (பஞ்சாப்), ராஜஸ்தான் ஃபீடர் (ஹரியானா) மற்றும் இந்திரா காந்தி கால்வாய் ஆகியவற்றிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்மொழியப்பட்டுள்ள இந்த கால்வாய் ஹரிகே தடுப்பணைக்கு இணையாக செல்லும்.
சத்தமின்றி தண்டிக்கும் உத்தி
இந்த நீர் திசைதிருப்பல் திட்டம் பல இந்திய மாகாணங்களுக்கு பெரும் நன்மைகளைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாகாணங்கள் மேம்பட்ட நீர் விநியோகத்தைப் பெற உள்ளன.
மட்டுமின்றி, மாசுபாடு மற்றும் குறைந்த நீர் மட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள யமுனை நதியின் சில பகுதிகளை மீட்டெடுக்க இந்த திட்டம் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
மேலும், இந்த திட்டம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீர் திட்டத்தின் மூலம், பாகிஸ்தானை சத்தமின்றி தண்டிக்கும் உத்தியை இந்தியா முன்னெடுக்க உள்ளது.
பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை முடக்குவதே இந்த திட்டத்தின் முதன்மையான நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |