இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா.. பயிற்சி ரத்து செய்து உடனே ஹோட்டல் அறைக்கு திரும்பிய வீரர்கள்! நடக்குமா கடைசி டெஸ்ட்?
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஆதரவு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்து வீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாக தனிமைப்படுத்தலில் இருக்கின்றனர்.
இந்நிலைியல், மான்செஸ்டரில் மேலும் ஒரு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சி ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் இன்றைய பயிற்சியை ரத்து செய்து உடனே ஹோட்டலுக்கு திரும்பியுள்ளனர்.
மேலதிக அறிவிப்பு வரும் வரை யாரும் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை மான்செஸ்டரில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெறவுள்ள நிலையில் இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதால் திட்டமிட்ட படி போட்டி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வியாழக்கிழமை காலை ஒட்டுமொத்த இந்திய அணியும் புதிய கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
வீரர்கள் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
இந்திய அணி வீரர்களில் யாருக்காவது தொற்று உறுதியானால், அது செப்டம்பர் 19ம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்கவிருக்கும் ஐபிஎல் 2021 தொடரை பாதிக்கும் என கூறப்படுகிறது.