இந்தியா - இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை இறுதிக்குள் கையெழுத்தாகும் எதிர்பார்ப்பு!
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஜூலை மாத இறுதிக்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்கான சட்டரீதியான சரிபார்ப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளுக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில், இந்திய வர்த்தகத் துறை செயலாளர் சுனில் பர்த்வால், தனது அதிகாரபூர்வ குழுவுடன் தற்போது லண்டனில் முகாமிட்டுள்ளார்.
இரண்டு நாள் பயணமாக லண்டன் சென்றுள்ள பர்த்வால், இங்கிலாந்து வர்த்தகம் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ஜொனாதன் ரெனால்ட்ஸ் மற்றும் பிற மூத்த பிரித்தானிய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார்.
வெற்றிகரமாக நிறைவடைந்த பேச்சுவார்த்தை
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் மே 6 அன்று வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இரு நாடுகளும் அறிவித்தன.
இந்த முக்கிய ஒப்பந்தம், தோல் பொருட்கள், காலணிகள் மற்றும் ஆடைகள் போன்ற தொழிலாளர் செறிவுமிக்க இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி மீதான வரிகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில், இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மற்றும் கார்களின் விலையை குறைக்கும். இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இரட்டிப்பாக்குவது இதன் முக்கிய இலக்காகும்.
உலகின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பெரிய பொருளாதாரங்களான இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே, மூன்று வருட கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த விரிவான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |