பிரித்தானியாவுக்கு இந்தியா விடுத்துள்ள எச்சரிக்கை... தடுப்பூசி தொடர்பில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்
பிரித்தானிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி ஒன்றை பெற்றவர்களை அங்கீகரிக்க மறுக்கும் பிரித்தானியா, பதில் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என இந்தியா எச்சரித்துள்ளது.
எலிக்கு தலையையும் புலிக்கு வாலையும் காட்டுவது என்று ஒரு பழமொழி உண்டு... அப்படித்தான் பிரித்தானியா நடந்துகொள்கிறதோ என நினைக்கத் தோன்றுகிறது.
அமெரிக்க அதிபரை சந்திக்கச் சென்றிருக்கிறார் போரிஸ் ஜான்சன். அவரை ஜோ பைடன் நடத்தும் விதம் அவ்வளவு ஒன்றும் கௌரவமாக இருப்பது போல தெரியவில்லை. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச முயல்கிறார் போரிஸ். அதற்கு தெனாவட்டாக பதிலளிக்கிறார் பைடன். அங்கே அப்படி ஒரு முகத்தைக் காட்டிக்கொண்டு, இந்தியாவுக்கு வேறு ஒரு முகத்தைக் காட்டுகிறது பிரித்தானியா.
ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி, பிரித்தானியாவில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானிய ஸ்வீடன் நிறுவனமான ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசி.
அதே தடுப்பூசிதான், இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
அப்படியிருக்கும் நிலையில், பிரித்தானிய நிறுவனத்தின் உரிமம் பெற்ற கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட இந்தியர்களை தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்காமல், அவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள் என கருதப்பட்டு, பிரித்தானியாவுக்குள் நுழைந்ததும் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என புதிய விதிகளைக் கொண்டுவந்துள்ளது பிரித்தானியா.
இதே கோவிஷீல்டு தடுப்பூசியை, பிரித்தானியாவில் கொரோனா நிலைமை மோசமாக இருந்தபோது தங்களுக்கு வழங்குமாறு பிரித்தானியா கோரியது. இந்தியாவும் பிரித்தானியாவுக்கு 5 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை வழங்கியது.
இந்நிலையில், பிரித்தானிய உரிமம் பெற்றதும், முன்பு பிரித்தானியர்களுமே பயன்படுத்தியதான அதே கோவிஷீல்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை பிரித்தானியா அங்கீகரிக்காதது பாரபட்சம் காட்டும் செயல் என்று இந்தியா கூறியுள்ளது. சில இந்திய பிரபலங்கள், பிரித்தானியாவின் செயல் இனரீயான அணுகுமுறை என்று கூட விமர்சித்துள்ளார்கள்.
இந்தியாவிலிருந்து பிரித்தானியா செல்லும் பயணிகள் இந்த புதிய விதிமுறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆகவே, அக்டோபர் 4ஆம் திகதிக்குள் பிரித்தானியா இந்த விடயம் தொடர்பில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தியா பதில் நடவடிக்கை எடுக்கும்.
அதாவது, பிரித்தானியாவிலிருந்து இந்தியா வரும் பயணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.
அக்டோபர் 4ஆம் திகதிதான் அடுத்தகட்ட புதிய விதிகளை பிரித்தானியா அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.