வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரம்: 66 ஓட்டங்களில் இந்தியா அசத்தல் வெற்றி
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ஓட்டங்களை மட்டுமே சேர்த்து 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து களம் கண்ட இந்திய அணியில் தவான் (98), விராட் கோஹ்லி (56), கேஎல் ராகுல் (62 நாட்அவுட்), குருணால் பாண்ட்யா (58 நாட்அவுட்) ஆகியோர் அரைசதம் அடிக்க இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் 318 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது.
தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பேர்ஸ்டோவ் 40 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய்- பேர்ஸ்டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 14.2 ஓவரில் 135 ஓட்டங்கள் குவித்தது.
அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார்.
இரண்டு விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோவ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 66 பந்தில் 6 பவுண்டரி, 7 சிக்சருடன் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. மார்கன் (22), பட்லர் (2), சாம் பில்லிங்ஸ் (18), மொயீன் அலி (30), சாம் கர்ரன் (12) ஓட்டங்களிலும் வெளியேற இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் 251 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 ஓவரில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.
புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள், ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகள், க்ருணால் பாண்டியா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


