தடை விதிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பலின் இந்திய மாலுமி பிரித்தானியாவில் கைது
ஆங்கிலக் கால்வாய்ப் பகுதியில் இடைமறிக்கப்பட்ட, தடைகளுக்கு உட்பட்ட ரஷ்ய எண்ணெய் கப்பல் ஒன்றின் இந்திய மாலுமி பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 ஆண்டுகள் சிறை
தடைகளுக்கு உட்பட்ட அந்த எண்ணெய் கப்பலானது, ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு பயணப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது நைனிடாலைச் சேர்ந்த அஜய் பந்த் என்ற மாலுமி, சவுத்தாம்ப்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ரஷ்ய எண்ணெயைக் கொண்டு சென்றது தொடர்பான பிரித்தானியாவின் பொருளாதாரத் தடை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
உத்தியோகப்பூர்வ கொடி ஏதுமின்றி பிரித்தானியாவின் கடல் எல்லைக்குள் நுழைந்த 'எம்வி ஸ்மைர்டோஸ்' (MV Smyrtos) என்ற கப்பலில், ஜூன் 14 அன்று ரோயல் மரைன்ஸ் மற்றும் தேசிய குற்றவியல் முகமை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தனர்.
இந்த நிலையில், கப்பலின் மாலுமியாக அடையாளம் காணப்பட்ட பந்த் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். இவ்வழக்கு ஜூலை 16 அன்று நடைபெறவுள்ள குற்றச்சாட்டுப் பதிவு மற்றும் விசாரணைக்கான ஆயத்த விசாரணைக்காக போர்ன்மவுத் கிரவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, மாலுமி தனது கடமைகளை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருந்தார் என்றும், கப்பல் செல்லும் இடத்திற்கோ அல்லது அதில் இருந்த சரக்கிற்கோ அவர் பொறுப்பல்ல என்றும் பந்தின் சட்டத்தரணி ஜேம்ஸ் டைமண்ட் வாதிட்டுள்ளார்.

பந்த் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்த எண்ணெய் கப்பலானது அக்டோபர் 2025 முதல் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு உட்பட்டுள்ளது;
மேலும், தடைகளுக்குள்ளான எண்ணெயைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் சட்டத்திற்கு புறம்பான கப்பல் வரிசையின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது.
இந்திய உயர் ஆணையகம்
இந்த நிலையில், பந்த் விடுவிக்கப்பட்டு நாடு திரும்புவதற்கு உதவி கோரி, உத்தரகண்ட் அதிகாரிகள் இந்திய அரசை அணுகியுள்ளனர். பிரித்தானியாவில் உள்ள இந்திய உயர் ஆணையகத்திற்கு, பந்தைச் சந்திப்பதற்கான தூதரக அணுகல் வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், டோர்செட்டில் உள்ள வெய்மவுத் கடற்கரைக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டுள்ள அந்தக் கப்பலில், இந்தியா மற்றும் ஜார்ஜியாவைச் சேர்ந்த 24 பணியாளர்கள் தங்கியுள்ளனர்.

வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், எம்வி ஸ்மைர்டோஸ் கப்பலானது ஜூன் 4 அன்று ரஷ்யாவின் உஸ்ட்-லுகா முனையத்தில் 101,400 டன் 'யூரல்ஸ்' (Urals) கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு, குஜராத்தின் சிக்கா துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
இக்கப்பல் முன்பு கேமரூன் நாட்டின் கொடியின் கீழ் இயங்கி வந்தது; ஆனால், இம்மாதத் தொடக்கத்தில் கேமரூன் அதனைத் தனது பதிவேட்டிலிருந்து நீக்கியதால், அது தற்போது அங்கீகரிக்கப்பட்ட கொடி ஏதுமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |