பால்கனியில் அழுதுக்கொண்டிருந்த 4 வயது குழந்தை: அமெரிக்காவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இந்திய தம்பதி
நான்கு வயதான சிறுமி தங்கள் வீட்டின் பால்கனியில் தனியாக அழுதுகொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்ததை அடுத்து ஒரு இந்திய தம்பதி தங்கள் வீட்டில் இறந்து கிடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்திய மாநிலம் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாலாஜி பரத் ருத்ரவார் என்பவர் அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
2014-ம் ஆண்டு ஆரதி என்பவரை மணந்துள்ள இவர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு 2015-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். நியூஜெர்ஸியில் இவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை. சம்பவத்தன்று நான்கு வயது குழந்தை பால்கனியில் நின்று அழுதுக்கொண்டிருப்பதை பக்கத்து வீட்டார்கள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பொலிசார் பாலாஜி வீட்டை திறந்த பார்த்தபோது கணவன் - மனைவி இருவரும் சடலமாக இருந்துள்ளனர்.
இருவரின் உடலிலும் வெட்டுக்காயம் இருப்பதை மருத்துவ அறிக்கை உறுதிசெய்துள்ளது. பாலாஜி தமது மனைவியை கொல்ல முயன்றிருக்கலாம் எனவும், அதில் ஆரதி படுகாயமடைந்து, இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இருவரும் கத்தியால் தாக்கியதாலையே இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டாலும், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு இறுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர். இதனிடையே, பாலாஜியின் தந்தை, புதன்கிழமை எனது பேத்தி பால்கனியில் நின்று அழுதுக்கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் வந்தபோது எனது மகன், மருமகள் இருவரும் சடலமாக இருந்துள்ளனர். வியாழக்கிழமை எங்களுக்கு தகவல் கிடைத்தது. மரணத்துக்கான காரணம் தெரியவில்லை என பொலிசார் கூறினர். உடற்கூராய்வு அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் அதன்பின்னர் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்றனர்.
என் மருமகள் இப்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். நாங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு மருமகளை அழைத்துவர திட்டமிட்டிருந்தோம். எங்களுக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தனர்.
அவர்களுடைய பக்கத்துவீட்டார்கள் மிகவும் அன்பானவர்கள்.
இருவரின் உடலும் இந்தியாவுக்கு வர 10 நாள்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனது பேத்தி என் மகனின் நண்பர் வீட்டில் இப்போது இருக்கிறார் என கண்கலங்கியுள்ளார்.
