17 நாடுகளுக்கு பரவிய கொடிய கொரோனா வைரஸ்! உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது. இதற்கு B.1.617 என்று பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா வேகமாக பரவுவதற்கு இந்த உருமாற்ற கொரோனாதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இந்தியாவில் பரவிவரும் B.1.617 உருமாறிய கொரோனா மற்ற நாடுகளுக்கும் பரவியது. இதனால் பல்வேறு நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் 17 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பிரித்தானியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் அதில் அடங்கும்.
இந்தியாவில் இருக்கும் பிற மாறுபாடுகளை காட்டிலும் பி-1-617 அதிக வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது. இது வேகமாக பரவக் கூடிய தன்மை கொண்டது என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், உலகளவில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இந்த இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா ஒரு முக்கிய பங்காக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.