கோலி செய்தது தவறு! அடுத்தவங்களுக்கு உபதேசம் பண்ணுவாரு ஆனா அவர் செய்யமாட்டாரா... கடுமையாக விமர்சித்த பிரபல வீரர்
விராட் கோலி தொடர்ந்து பேட்டிங்கில் தொதப்பி கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ள நிலையில் அவரின் தவறுகளை முன்னாள் இந்திய வீரர் சுட்டிகாட்டியுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் நடைபெற்று வரும் சூழலில் முதல் இன்னிங்ஸில் 78/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி, 17 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்களை மட்டுமே அடித்து, ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஆண்டர்சனிடம் கோலி ஆட்டமிழப்பது இது 7ஆவது முறையாகும். மேலும், ஒரு சதம் கூட எடுக்காமல் கோலி தொடர்ச்சியாக விளையாடும் 50ஆவது போட்டி இதுவாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 18 டெஸ்ட், 15 ஒருநாள், 17 டி20 போட்டிகளில் கோலி சதமடிக்கவில்லை. இது கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் கோலி குறித்து பேசிய முன்னாள் வீரரான மனிந்தர் சிங், கோலி அடுத்தவருக்கு அறிவுரை கூடுகிறாரே தவிர அதன்படி அவர் நடப்பதில்லை என கூறியுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கோலி, சண்டை, பழிவாங்கும் எண்ணங்களை ஓரம்கட்டிவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அதை கோலி மீறிய நிலையில் அதனை சுட்டிக்காட்டி தான் மனிந்தர் சிங் இவ்வாறு பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கோலி கூறியதை அவரே செய்யவில்லை. இந்திய பிட்ச் போல் இங்கு உடனே கவர் டிரைவ் அடிக்க முடியாது. சிறிது நேரம் தாக்குப்பிடித்து செட்டில் ஆன பிறகுதான் கவர் டிரைவ் அடிக்க வேண்டும்.
இதற்குமுன் இப்படி செயல்பட்டுத்தான், இங்கிலாந்தில் ஒரு தொடரில் 600 ரன்கள் குவித்தார். பிட்சின் தன்மை உணரும்வரை பொறுமை முக்கியம் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.